எம்.ஹெச்.370 விமானம் காணாமல் போய் ஓராண்டு நிறைவு- தேடுதல் பணிகள் தொடர்வதாக மலேசியா அறிவிப்பு
கோலாலம்பூர்: பெய்ஜிங்கிற்கு கிட்டதட்ட 239 பேருடன் சென்ற மலேசிய விமானம் காணாமல் போய் ஓராண்டுகள் நிறைவடையும் நிலையில் அவ்விமானத்தின் உதிரி பாகங்களோ, இறந்தவர்களின் உடலோ இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.
மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து கடந்த ஆண்டு மார்ச் மாதம் 8 ஆம் தேதி சீனதலைநகர் பெய்ஜிங்குக்கு சென்ற பயணிகள் விமானம் கடலில் விழுந்தது. இவ்விபத்தில் அந்த விமானத்தில் பயணம் செய்த 239 பேரும் பலியாகினர்.
விபத்தை தொடர்ந்து அந்த விமான பாகங்களை இந்திய பெருங்கடலில் தேடும் பணி தீவிரமாக நடந்தது. இப்பணியில் ஆஸ்திரேலியா, சீனா, அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் ஈடுபட்டன. இருந்தும் விமானத்தின் உதிரி பாகங்களோ அல்லது விபத்தில் இறந்தவர்களின் உடலோ இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.
ஆஸ்திரேலிய நிபுணர்கள் தலைமையில் ஆழ்கடல் பகுதியில் 4 பெரிய கப்பல்கள் தேடுதல் பணியில் ஈடுபட்டு வருகின்றன. சுமார் 60 ஆயிரம் சதுர கிலோ மீட்டர் பகுதியை மையமாக வைத்து நடந்துவரும் இந்த தேடலில் 40 சதவீதம் நிறைவடைந்துள்ளது.
எனினும், இதுவரை ஒரு சிறு துரும்பு கூட கிடைத்தபாடில்லை. மீதமுள்ள ஆழ்கடல் பகுதியை தேடும் பணிகள் வரும் மே மாதத்துக்குள் நிறைவடைந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நாளையுடன் இந்த விபத்து நிகழ்ந்து ஓராண்டு நிறைவடைகிறது. இதனையொட்டி, இந்த கோரவிபத்து தொடர்பாக செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டியளித்த மலேசிய போக்குவரத்து துறை மந்திரி லியோவ், இந்த விபத்து தொடர்பாக விசாரணை நடத்த நியமிக்கப்பட்ட சர்வதேச விசாரணைக் குழுவினர் இன்னும் சில நாட்களில் அறிக்கையை தாக்கல் செய்வார்கள் என நம்பிக்கை தெரிவித்தார்.
விபத்தில் பலியான பயணிகள் மற்றும் விமான ஊழியர்களின் குடும்பத்தாருக்கு ஆறுதல் தெரிவித்துள்ள அவர், "தேடுதலை தொடர நாங்கள் அர்ப்பணிப்பு உணர்வோடு இருக்கிறோம்.
ஆனால், அதற்கென இலக்கிட்டிருக்கும் இடத்தில் எதுவும் கிடைக்கவில்லை என்றால் பின்நோக்கி சென்று கையில் கிடைத்திருக்கும் ஆதாரங்களை மறுஆய்வு செய்ய வேண்டிய நிலையில் உள்ளோம்" என குறிப்பிட்டுள்ளார்.
இந்த அறிவிப்பை வைத்து பார்க்கையில், இதுவரை தேடுதல் வேட்டையில் மலேசிய அரசு வெற்றி பெறவில்லை என்று தெரியவந்துள்ளது.
இந்நிலையில், மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் உள்ள மலேசியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தில் பலியான பயணிகளுக்கு நாளை அஞ்சலி நிகழ்ச்சி நடத்த ஏற்பாடு நடந்து வருகின்றது.