கடலில் மீட்கப்பட்ட பாகம் மாயமான மலேசிய விமானத்தினுடையதா? ஆய்வு செய்ய பிரான்ஸ் கொண்டுசெல்லப்பட்டது
கோலாலம்பூர் : இந்திய பெருங்கடலில் கண்டெடுக்கப்பட்ட விமானத்தின் பாகம் மாயமான மலேசிய எம்.எச்.370 போயிங் விமானத்திற்கு சொந்தமானதா என்பதைய ஆய்வு செய்ய பிரான்சுக்கு பலத்த பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டது.
பிரான்ஸ் ரீயூனியன் கடற்பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட மாயமான மலேசிய விமானத்தின் சிதைவடைந்த பாகங்களை ஆய்வு செய்ய வல்லுனர் குழு ஒன்றையும் மலேசிய அரசு அனுப்பியுள்ளது.
மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீனத் தலைநகர் பீஜிங்கிற்கு 239 பயணிகளுடன் கடந்த ஆண்டு மார்ச் மாதம் 8-ந்தேதி மலேசியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான எம்.எச்.370 போயிங் ரக விமானம் புறப்பட்டுச் சென்றது. அதில் 5 இந்திய பயணிகளும் இருந்தனர்.
அந்த விமானம் புறப்பட்டுச் சென்ற சிறிது நேரத்தில் தரைக்கட்டுப்பாட்டு நிலையத்துடன் கொண்டிருந்த தொடர்பை இழந்தது. பின்னர் அந்த விமானம் என்னவானது, அதில் இருந்த பயணிகள் என்ன ஆனார்கள்? என்பது ஓராண்டு கடந்துவிட்ட நிலையிலும் உறுதியாக தெரியவரவில்லை.
இந்த நிலையில், பிரான்ஸ் நாட்டில் உள்ள ரீயூனியன் தீவின் கடற்கரையில் (இந்திய பெருங்கடலின் மேற்கு பகுதியில்) ஒரு விமானத்தின் பாகம் கரை ஒதுங்கியது. இது மாயமான மலேசிய விமானத்தின் சிதைவாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. இந்த சிதைவு 2 மீட்டர் நீளமும், 1 மீட்டர் அகலமும் உள்ளது.இந்த சிதைவின் புகைப்படத்தை வைத்து போயிங் விமான நிறுவனம் ஆய்வு செய்து வருகிறது.
மேலும் இதுதொடர்பாக ஆய்வு செய்த மலேசிய வல்லுனர் குழு, கண்டெடுக்கப்பட்ட பாகமானது மாயமான விமானத்தின் இறக்கையாக இருக்கலாம் என தெரிவித்துள்ளது.
விமானத்தின் சிதைவு பாகங்கள் பாரிஸ் விமான நிலையத்திற்கு கொண்டுவரப்பட்டது. அது தற்போது தெற்கு பிரான்ஸ் நகரமான, டோலோஸ்-ல் உள்ள அந்நாட்டின் பாதுகாப்பு துறையின் ஆய்வகம் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அந்த பாகங்களை ஆய்வு செய்யும் பணி வரும் புதன் கிழமை அன்று தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.