மாயமான மலேசிய விமானத்தை தேடுகையில் வெளிச்சத்திற்கு வந்த கப்பல் விபத்து
கான்பெர்ரா: தெற்கு இந்திய பெருங்கடலில் மாயமான மலேசிய விமானத்தை தேடுகையில் விபத்துக்குள்ளாகி கடலுக்கு அடியில் கிடந்த 19வது நூற்றாண்டு சரக்கு கப்பல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு மார்ச் மாதம் 8ம் தேதி மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீன தலைநகர் பெய்ஜிங்கிற்கு 239 பேருடன் கிளம்பிய மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் எம்.ஹெச். 370 மாயமானது. விமானம் தெற்கு இந்திய பெருங்கடலில் விழுந்து மூழ்கிவிட்டதாகவும், அதில் இருந்த அனைவரும் பலியாகிவிட்டதாகவும் மலேசிய அரசு தெரிவித்தது.
இதையடுத்து ஆஸ்திரேலியா தலைமையில் விமானத்தை தேடும் பணி நடந்து வருகிறது.
பாகம்
ஓராண்டுக்கு மேல் விமானத்தை தேடும் பணி நடந்து வருகிறது. இருப்பினும் இதுவரை விமானத்தின் ஒரு பாகம் கூட கிடைக்கவில்லை. இருப்பினும் தேடல் பணியை அதிகாரிகள் கைவிடவில்லை.
பொருட்கள்
மேற்கு ஆஸ்திரேலிய கடற்பகுதி அருகே உள்ள தெற்கு இந்திய பெருங்கடலில் 60 ஆயிரம் சதுர கிலோமீட்டர் பகுதியில் விமானத்தை தேடி வருகிறார்கள். இந்நிலையில் கடலுக்கு அடியில் சில பொருட்கள் கிடப்பதை சோனார் கருவி கண்டுபிடித்துள்ளது.
கப்பல்
சோனார் கருவி கண்டுபிடித்துள்ள பொருட்கள் மாயமான மலேசிய விமானத்தினுடையது அல்ல. மாறாக விபத்துக்குள்ளாகி கடலில் மூழ்கிய 19வது நூற்றாண்டு சரக்கு கப்பல் உடையது என்பது தெரிய வந்துள்ளது.
அதிருப்தி
விமானத்தை தேடுகையில் அதன் பாகம் எதுவும் கிடைக்காததால் அதிகாரிகள் அதிருப்தி அடைந்துள்ளனர். இருப்பினும் தேடல் பணியில் பயன்படுத்தப்படும் கருவிகள் சிறப்பாக செயல்படுவதை நினைத்து மகிழும் அதிகாரிகள் விரைவில் விமான பாகங்களை கண்டுபிடிப்போம் என்று நம்புகிறார்கள்.