உறுமும் இர்மா.. 'பேய் நகரமான' மியாமி!
வாஷிங்டன்: இர்மா புயல் அமெரிக்காவின் புளோரிடாவை நெருங்குவதற்கு முன்பே பல லட்சம் வீட்டை விட்டு கிளம்பிவிட்டதால்,மக்கள் நடமாட்டம் இன்றி மியாமி நகரம் வெறிச்சோடியுள்ளது .
கியூபாவில் கரையைக் கடந்த போது 3ஆம் நிலைப் புயலாக வலு குறைந்தது இர்மா. ஆனால், மீண்டும் 4ஆம் நிலைக்கு வலுப்பெற்றுள்ளதாக அமெரிக்க வானிலை மையம் எச்சரித்துள்ளது.
ஃபுளோரிடா நோக்கி இர்மா நகர்ந்து வருவதால், மாகாணத்தின் தெற்கு பகுதிகளில் காற்று அதிவேகத்தில் வீசுகிறது. மணிக்கு 200 முதல் 250 கிலோ மீட்டர் வரை புயல் வேகம் பெறும் என்பதால் ஃபுளோரிடா மாகாணம் பேரழிவை சந்திக்கும் என்று தேசிய புயல் மையம் எச்சரித்துள்ளது.
நெருங்கும் புயல்
தற்போது ஃபுளோரிடாவை புயல் நெருங்குவதால் ஹைலேண்ட்ஸ் கவுண்டி, கரோலினாவின் போல்க் கவுண்டி, ஓசேலோ கவுண்டி ஆகிய இடங்களில் பலத்த காற்று வீசி வருகிறது. கடல் கொந்தளிப்புடன் காணப்படுவதுடன், கனமழை பெய்ய தொடங்கியுள்ளது.
70 லட்சம் பேர்
புயல் நெருங்குவதால் ஃபுளோரிடாவை விட்டு 70 லட்சம் மக்கள் வெளியேறி விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதேபோல் ஃபுளோரிடா மாகாணத்திலுள்ள புகழ் பெற்ற மியாமி நகரில் வசித்த மக்கள் அனைவரும் நகரை விட்டு வெளியேறினர். இதனால் எப்போது பரபரப்பாக காணப்படும் துறைமுக நகரமான மியாமி, வெறிச்சோடியது. சாலைகளில் வாகனங்கள் எதுவும் செல்லவில்லை.
பேய் நகரம்
லாஸ் ஏஞ்சல்ஸ் போன்ற முன்னணி அமெரிக்க பத்திரிகைகள் 'Ghost city' என்று மியாமியை வர்ணிக்கும் அளவுக்கு வெறிச்சோடி கிடக்கிறது. மக்கள் அனைவரும் தங்களுக்கு தேவையான பொருட்களை தற்போதே வாங்கி குவித்து விட்டனர். 16 முகாம்களுக்கு மேல் அமைக்கப்பட்டு மக்கள் அங்கு தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
அவசர நிலை
தேவையான மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்கான நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. ஜியார்ஜியா, கரோலினா, விர்ஜீனியா ஆகிய மாகாணங்களில் அவசர நிலை கொண்டு வரப்பட்டுள்ளது.