கோமாவில் இருந்த பார்முலா ஒன் லெஜன்ட் மைக்கேல் ஷூமாக்கருக்கு நினைவு திரும்பியது: டிஸ்சார்ஜ் ஆனார்
பாரிஸ்: பனிச்சறுக்கு விளையாட்டின்போது தலையில் அடிபட்டு கோமாவில் இருந்த பார்முலா ஒன் கார் பந்தய வீரரான மைக்கேல் ஷூமாக்கர் நினைவு திரும்பி மருத்துவமனையில் இருந்து அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
பார்முலா ஒன் கார் பந்தய வீரரான மைக்கேல் ஷூமாக்கர் கடந்த டிசம்பர் மாதம் 29ம் தேதி பிரான்ஸில் பனிச்சறுக்கு விளையாட்டில் ஈடுபட்டிருந்தபோது விபத்து ஏற்பட்டது. இதில் தலையில் பலத்த காயம் அடைந்த அவர் பிரான்ஸில் உள்ள கிரனோபல் பல்கலைக்கழக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மூளையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்ட அவர் கோமாவில் இருந்தார்.
6 மாதங்களாக கோமாவில் இருந்த அவருக்கு தற்போது நினைவு திரும்பியுள்ளது. இத்தனை மாதங்களாக தீவிர சிகிச்சை பிரிவில் மருத்துவர்கள் கண்காணிப்பில் இருந்து வந்த அவர் மருத்துவமனையில் இருந்து அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். இந்த தகவலை அவரின் மேனேஜர் சபின் கெஹ்ம் தெரிவித்துள்ளார்.
ஆனால் ஷூமாக்கரை பிரான்ஸ் மருத்துவமனையில் இருந்து எங்கு அழைத்துச் சென்றுள்ளனர் என்ற தகவலை சபின் தெரிவிக்கவில்லை. ஷூமாக்கரை எங்கு கொண்டு சென்றுள்ளார்கள் என்பதை விட அவருக்கு நினைவு திரும்பியது அவரது ரசிகர்களை மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தியுள்ளது.