மிச்சிகனில் கூடி... நீட் வேண்டாம் என வலியுறுத்திய அமெரிக்கத் தமிழர்கள்!
மாணவி அனிதா மரணத்தையொட்டி மிஷிகனில் அமெரிக்க வாழ் தமிழர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர்.
மிச்சிகன் : அமெரிக்காவின் மிஷிகனில் அனிதாவின் தற்கொலைக்கு தமிழர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தியதோடு, தமிழகத்திற்கு நீட் தேர்வு தேவையில்லை என்றும் முழக்கமிட்டனர்.
அரியலூர் மாணவி அனிதா பிளஸ் 2வில் அதிக மதிப்பெண் பெற்ற போதும், நீட் தேர்வில் குறைவான மதிப்பெண் பெற்றதால் அவருடைய மருத்துவ கனவு களைந்தது. இதனால் விரக்தியடைந்த மாணவி அனிதா கடந்த வெள்ளிக்கிழமை தனது உயிரை மாய்த்துக் கொண்டார். அனிதாவின் மரணம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
மாணவி அனிதாவின் தற்கொலைக்கு நீதி கேட்டும், நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு தடை கோரியும் மாணவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அமெரிக்காவின் மிச்சிகனில் வெளிநாடு வாழ் தமிழகர்கள் ஒன்று திரண்டு மாணவி அனிதாவிற்கு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர்.
கடும் குளிரிலும் போராட்டம்
கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் குழந்தைகள் முதல் பெரியவர் வரை அணிவகுத்து நின்று அனிதாவிற்கு அஞ்சலி செலுத்தினர். நீட்டை தடை செய்ய வேண்டும், தமிழகத்திற்கு நீட் தேவையில்லை உள்ளிட்ட பதாகைகளை ஏந்தி நின்று அவர்கள் தங்களுடைய எதிர்ப்பை வெளிக்காட்டினர்.
நீதி கேட்கும் கூட்டம்
போராட்டம் குறித்து பேசிய தமிழர் : எல்லாத் தகுதிகள் இருந்தும் மருத்துவ வாய்ப்பு கிடைக்காமல் உயிரை விட்ட மாணவி அனிதாவிற்கு இரங்கல் தெரிவிக்க அமெரிக்காவின் மிஷிகன் மாநிலத்தில் உள்ள தமிழகர்கள் ஒன்று கூடிஇருக்கிறோம். இது வெறும் இரங்கல் கூட்டம் மட்டுமல்ல, அனிதாவிற்கு நீதி கேட்கும் கூட்டம்.
பாதிக்கக் கூடாது
1176 மதிப்பெண் பெற்றும், எந்த தவறும் செய்யாத அப்பாவி அனிதா தனக்கான மருத்துவ வாய்ப்பு பறிபோனதால் தனது உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார். இனி இது போன்று வேறு எந்த மாணவரும் பாதிக்கக் கூடாது.
அரசு சரிசெய்ய வேண்டும்
இதற்கான முழுபொறுப்பு அரசுக்கே உள்ளது, அரசுகளின் தெளிவற்ற தன்மையே காரணம். தமிழகம் ஒரு தரமான மருத்துவரை இழந்துள்ளது, அனிதா மட்டுமல்ல அவர் போன்று மேலும் பல ஏழை மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர், அவர்களுக்காகத் தான் நாங்கள் போராடுகிறோம். விரைவில் அதற்கான தீர்வை அரசு அளிக்கும் என நம்புகிறோம்.