ஆட்குறைப்பு நடவடிக்கையில் மைக்ரோசாஃப்ட்.... ஆயிரம் ஊழியர்களின் பணிக்கு ஆபத்து
மைக்ரோசாஃப்ட் நிறுவனம் ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சான் ஃபிரான்சிஸ்கோ : மென்பொருள் தயாரிப்பு தொடர்பான பணிகளை கிளவுட் கம்ப்யூட்டிங் முறையில் செய்ய மைக்ரோசாஃப்ட் நிறுவனம் முடிவு செய்துள்ளதால் சுமார் ஆயிரம் ஊழியர்கள் பணியிழக்க நேரிடும் நிலை ஏற்பட்டுள்ளது.
அமெரிக்காவின் தொழில்நுட்ப செய்திகளை வழங்கும் க்ரீக்வயர் இணையதளம் வெளியிட்டுள்ள செய்தியில் இது குறிப்பிடப்பட்டுள்ளது.
மைக்ரோசாஃப்ட் நிறுவனம் தங்களது வாடிக்கையாளர்களுக்கும், தொழில்முனை பங்குதாரர்களுக்கும் நல்ல முறையில் சேவையாற்ற சில மாற்றங்களைக் கொண்டு வர முடிவு செய்துள்ளது.
அதிரடி மாற்றம்
டிஜிட்டல் பரிமாணங்களை வாடிக்கையாளர்கள் சிறப்பான முறையில் மேற்கொள்ள சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும், இதன்படி சில அறிவிப்புகளை அந்த நிறுவனம் வெளியிட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த முடிவு இந்த மாத இறுதியில் வரலாம் என்று தெரிகிறது.
ஆட்குறைப்பு நடவடிக்கை
மைக்ரோசாஃப்ட் நிறுவன செயல்தலைவர் சத்யா நாதெல்லா மென்பொருள் தயாரிப்புப் பிரிவில் இருந்து தொழில்நுட்ப வல்லுநர்களை குறைத்துவிட்டு, வர்த்தக சேவை மற்றும் கிளவுட் கம்ப்யூட்டிங் முறையில் பணிகளை நிறைவேற்றிக் கொள்ள திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சத்யா நாதெல்லா
"பெரிய நிறுவனங்கள் முதல் நடுத்தர வர்த்தகர்கள் வரை உலகம் முழுவதிலும் பல்வேறு நிறுவனங்கள் மைக்ரோசாஃப்டின் கிளவுட் தளத்தை பயன்படுத்தி டிஜிட்டல் பரிமாணமத்திற்கு மாறி வருகின்றன," என்று நாதெல்லா இந்த ஆண்டின் தொடக்க கால 3 மாதங்களில் ஈட்டப்பட்ட வருமானம் குறித்து தெரிவித்துள்ளார்.
மறுசீரமைப்பு
கிளவுட் கம்ப்யூட்டிங் மூலம் மைக்ரோசாஃப்ட் நிறுவனம் லாபம் சம்பாதித்துள்ளதால், சொந்தமாக ஆட்களை வைத்து கம்ப்யூட்டிங் செய்யும் முறையை கைவிட முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. விற்பனை மற்றும் சந்தைப்படுத்துதல் துறையை மறுசீரமைக்கும் முயற்சியாக இந்த நடவடிக்கையை எடுக்க மைக்ரோஃசாப்ட் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஜூலை இறுதியில் அறிவிப்பு
இந்த மாதம் 20ம் தேதி மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் முதல் காலாண்டு முடிவுகள் வெளியாகின்றன. அந்த முடிவுகளின் அடிப்பைடயில் ஆட்குறைப்பு குறித்த அறிவிப்பும் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பணிநீக்கம்
கடந்த 2015ம் ஆண்டில் 7,800 ஊழியர்களையும், கடந்த ஆண்டு 4 ஆயிரத்து 700 ஊழியர்களையும் மைக்ரோசாஃப்ட் நிறுவனம் பணிநீக்கம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. பல மென்பெருள் நிறுவனங்களிலும் ஆட்குறைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.