சக விமானியை காக்பிட்டுக்கு வெளியே விட்டு கதவை பூட்டிய கேப்டன்: நடுவானில் 'பரபர'!
வெல்லிங்டன்: ஆஸ்திரேலியாவில் இருந்து நியூசிலாந்திற்கு சென்ற ஏர் நியூசிலாந்து விமானத்தின் கேப்டன் சக விமானியை அறைக்கு வெளியேவிட்டு கதவை பூட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
கடந்த மே மாதம் 21ம் தேதி ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரில் இருந்து நியூசிலாந்தில் உள்ள ஆக்லேண்டிற்கு ஏர் நியூசிலாந்து விமானம் ஒன்று கிளம்பியது. விமானத்தை கிளப்பும் முன்பு சக விமானி போதை வஸ்து எடுத்துள்ளாரா மற்றும் மது குடித்துள்ளாரா என்று பரிசோதிக்கப்பட்டுள்ளது. இதனால் விமானம் தாமதாக கிளம்பியுள்ளது.
விமானம் தாமதமாக கிளம்பியதால் கேப்டன் மற்றும் சக விமானிக்கு இடையே மனக்கசப்பு ஏற்பட்டுள்ளது. இரவு நேரத்தில் கிளம்பிய விமானத்தில் இரண்டு விமானிகளில் ஒருவர் தனது அறையை விட்டு வெளியே வந்து சிப்பந்திகளுடன் சேர்ந்து காபி குடித்துள்ளார். அதன் பிறகு தனது அறைக்கு திரும்பியுள்ளார்.
சக விமானி உள்ளே வர வேண்டும் கதவை திறந்துவிடுங்கள் என்று கூற சிப்பந்தி ஒருவர் போன் செய்ய கேப்டன் போனை எடுக்கவில்லை. மேலும் அவர் கதவையும் திறக்கவில்லை. கேப்டன் போனை எடுக்காததாலும், கதவை திறக்காததாலும் சக விமானி கவலை அடைந்தார். இதையடுத்து சக விமானி வேறு முறை மூலம் அறைக்குள் சென்றுள்ளார்.
இப்படி சக விமானியை அறைக்கு வெளியே நிற்கவிட்ட கேப்டன் 2 வாரங்களும், சக விமானி ஒரு வாரமும் விமானத்தை இயக்க அனுமதி மறுக்கப்பட்டது. மேலும் கேப்டன் மற்றும் சக விமானி ஆகியோருக்கு கவுன்சிலிங்கும், கூடுதல் பயிற்சியும் அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் குறித்து ஏர்லைன்ஸ் நிறுவனம் விசாரணை நடத்தி விமான போக்குவரத்து துறைக்கு அறிக்கையை அனுப்பி வைத்துள்ளது.