லிபியாவில் அகதிகளை ஏற்றிச் சென்ற 2 படகுகள் கவிழ்ந்து விபத்து: கடலில் மிதந்த 200 உடல்கள்
ஜுவாரா: லிபியாவில் இருந்து ஐரோப்பாவுக்கு அகதிகளாக கிளம்பிய 500க்கும் மேற்பட்டோர் சென்ற 2 படகுகள் கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் 200 பேர் பலியாகியுள்ளனர்.
லிபியாவில் நடந்து வரும் உள்நாட்டு போர் மற்றும் அரசியல் நெருக்கடி ஆகியவற்றால் மக்கள் நாட்டை விட்டு வெளியேறி ஐரோப்பிய நாடுகளில் சட்டவிரோதமாக குடிபெயர்ந்து கொண்டிருக்கிறார்கள். மக்கள் லிபியாவில் இருந்து படகுகளில் கிளம்புகிறார்கள். அதில் பல முறை படகுகள் நடுக்கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகி வருகிறது.
இந்நிலையில் லிபியாவில் இருந்து அகதிகளை ஏற்றிக் கொண்டு ஐரோப்பாவுக்கு கிளம்பிய இரண்டு படகுகள் வியாழக்கிழமை ஜுவாரா நகர் அருகே நடுக்கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகின. ஒரு படகில் 50க்கும் மேற்பட்டோரும், மற்றொரு படகில் 400க்கும் மேற்பட்டோரும் இருந்தனர்.
விபத்து குறித்து தகவல் அறிந்த கடலோர காவல்படையினர் விரைந்து வந்து 201 பேரை உயிருடன் மீட்டனர். மேலும் 200 பேரின் உடல்கள் கடலில் மிதந்துள்ளது. உடல்கள் மீட்கப்பட்டு ஜுவாரா நகரில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. முன்னதாக கடந்த 6ம் தேதி லிபியாவில் இருந்து கிளம்பிய படகு விபத்துக்குள்ளானதில் 25 பேர் கடலில் மூழ்கி பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ஆண்டில் மட்டும் லிபியாவில் இருந்து ஐரோப்பாவுக்கு கிளம்பிய படகுகள் விபத்துக்குள்ளானதில் இதுவரை 2 ஆயிரத்து 400க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.