பனியில் வாடும் அகதிகளுக்கு தற்காலிக குடியிருப்புகள்... ஐரோப்பிய நாடுகள் ஒப்புதல்
பெர்லின்: மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து வரும் அகதிகளில் சுமார் ஒரு லட்சம் பேருக்கான தற்கால குடியிருப்புகள் அமைப்பது உள்ளிட்ட 17 அம்ச புதிய செயல் திட்டத்திற்கு மத்திய ஐரோப்பிய மற்றும் தென் கிழக்கு ஐரோப்பிய (பால்கன் பிராந்தியம்) நாடுகளின் தலைவர்கள் ஒப்புக் கொண்டுள்ளனர்.
உள்நாட்டுப் போர் நடைபெற்று வரும் சிரியா, ஈராக் உள்பட மத்திய கிழக்கு பகுதியில் இருந்து அதிக அளவிலும், வறுமையின் பிடியில் உள்ள ஆப்பிரிக்க நாடுகள் சிலவற்றில் இருந்தும் ஐரோப்பிய நாடுகளுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கில் அகதிகள் வருகின்றனர்.
இவர்கள் சட்டத்திற்குப் புறம்பாக கடல்வழியாக ஆபத்தான பயண்ம் மேற்கொள்கின்றனர். இதனால் அடிக்கடி படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளாவதில், அகதிகள் உயிரிழப்பது அதிகரித்து வருகிறது.
அய்லான்...
சிரியாவில் இருந்து அகதியாக வந்த 3 வயது சிறுவன் அய்லான், துருக்கி கடற்கரையில் சடலமாகக் கிடந்த புகைப்படம் சர்வதேச அளவில் அகதிகளின் பரிதாப நிலை குறித்து எடுத்துக்காட்டுவதாக அமைந்தது. அதனைத் தொடர்ந்து அகதி களை ஏற்க ஐரோப்பிய யூனியன் நாடுகள் தயக்கம் காட்டக் கூடாது என்று கோரிக்கை வலுத்தது. அகதிகளை ஏற்பதில் ஐரோப்பிய நாடுகள் சற்று இறங்கி வந்தன. இதில் ஜெர்மனி மட்டும் தாராளமாக அகதிகளை ஏற்றுக் கொண்டது.
நெருக்கடி...
இந்நிலையில், சிரியாவில் ரஷ்யாவும் தாக்குதலைத் தொடங்கியுள்ளதால் அங்கிருந்து அதிக அளவிலான அகதிகள் ஐரோப்பாவை நோக்கி வரத் தொடங்கியுள்ளனர். இதனால் பால்கன் தீபகற்பம் மற்றும் பிற ஐரோப்பிய நாடுகளுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
குளிரில் அகதிகள்...
அகதிகள் வரத்து அதிகமானதால் ஹங்கேரி தனது எல்லையை சமீபத்தில் மூடியது. ஸ்லோவேனியா, குரோஷியா உள்ளிட்ட நாடுகள் எல்லையை மூடப் போவதாக அறிவித்துள்ளன. இதனால் அகதிகள் கடும் குளிரில் மரத்தடியிலும், வெட்டவெளியிலும் தங்கியுள்ளனர். இதனால் பனியால் அகதிகள் உயிரிழக்கும் அபாயமும் அதிகரித்துள்ளது.
ஆலோசனை...
இந்நிலையில், அகதிகள் பிரச்சினை தொடர்பாக ஐரோப்பிய யூனியன், பால்கன் தீபகற்ப பகுதி நாடுகள் பெல்ஜியம் தலைநகர் பிரஸ்ஸெல்ஸில் கூடி ஆலோசனை நடத்தின. இருநாட்கள் நடை பெற்ற இந்த கூட்டத்தில் ஜெர்மனி, கிரீஸ், ஹங்கேரி, ருமேனியா, செர்பியா, ஸ்லோவேனியா, அல்பேனியா, ஆஸ்திரியா, பல்கேரியா, குரோஷியா, மாசிடோனியா குடியரசு உள்ளிட்ட நாடு களின் தலைவர்கள் பங்கேற்றனர்.
எல்லையைத் திறக்க சம்மதம்...
இந்தக் கூட்டத்தில் கடும் பனி, மழையால் வாடி வரும் அகதிகளின் உயிரை காப்பது குறித்து முக்கியமாக ஆலோசிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து அகதிகளுக்காக எல்லையை மீண்டும் திறக்க ஹங்கேரி ஒப்புக் கொண்டுள்ளது. பிற நாடுகளும் எல்லையை மூடப்போவதில்லை என்று உறுதி அளித்துள்ளன.
சிறப்பு முகாம்கள்...
இது தவிர அகதிகளை வரவேற்று தங்கவைக்க மேலும் பல சிறப்பு முகாம்களை திறக்கவும், பாதுகாப்பாக அனுப்பி வைக்க கூடுதல் பேருந்துகளை அனுமதிப்பதற்கும், அகதிகளை ஒழுங்குபடுத்த போலீஸாரை அதிக அளவில் நியமிக்கவும் இந்த கூட்டத்தில் ஒப்புக் கொள்ளப்பட்டது.
தற்காலிக குடியிருப்புகள்...
மேலும் சுமார் 1 லட்சம் அகதிகளுக்கு தங்கும் இடமும், உணவும் ஏற்பாடு செய்ய அனைத்து நாடுகளும் ஒப்புக் கொண்டுள்ளன. இதற்கு உதவ ஐ.நா. அகதிகள் பாதுகாப்பு பிரிவும் முன் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.