9 ஆயிரம் பேரை பலி வாங்கிய நேபாளத்தில் இன்று மீண்டும் நில நடுக்கம்- பீதி அகலாத மக்கள்!
காத்மண்டு: நேபாள நாட்டில் இன்று மீண்டும் 6 முறை நிலஅதிர்வு உணரப்பட்டதால் பொதுமக்கள் பீதியடைந்தனர். இந்த நிலஅதிர்வுகள் ரிக்டர் அளவில் 4 புள்ளிகளாகவும், அதற்கு அதிகமாகவும் பதிவானதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
நேபாள தலைநகர் காத்மாண்டு அருகே உள்ள கோர்கா மாவட்டத்தை மையமாக கொண்டு கடந்த 25-ந்தேதி ஏற்பட்ட மிகப்பெரிய நிலநடுக்கத்தால் அந்த நாடே உருக்குலைந்து போனது.
கடந்த 80 ஆண்டுகளில் இல்லாத பேரழிவை சந்தித்துள்ள நேபாளம், அதிலிருந்து மீளமுடியாமல் தவிக்கிறது. அந்த நிலநடுக்கத்துக்கு, நேபாளத்தில் மட்டும் 9,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததுடன், 20,000-க்கும் அதிகமானோர் வரை காயமடைந்துள்ளனர். பலர் கை கால்களை இழந்து தவித்து வருகின்றனர்.
நேபாளத்தில் பேரழிவை ஏற்படுத்திய நில நடுக்கம் நிகழ்ந்து, ஒரு மாதம் கடந்த நிலையில், இன்று மீண்டும் 6 முறை நிலஅதிர்வு உணரப்பட்டது.
நிலஅதிர்வுகள் ரிக்டர் அளவில் 4 புள்ளிகளாகவும், அதற்கு அதிகமாகவும் பதிவாகி உள்ளது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. காலை 5.29 மணியளவில் நேபாளம் தலைநகர் காட்மாண்டுவில் 4.0 ரிக்டர் அளவுகொண்ட நிலஅதிர்வு ஏற்பட்டு உள்ளது.
பின்னர் டோலாகா மாவட்டத்தை மையமாக கொண்டு 4.2 ரிக்டர் அளவுகொண்ட நிலஅதிர்வு ஏற்பட்டது. முன்னதாக 3.07 மணி மற்றும் 3.40 மணியளவிலும் 4.0 ரிக்டர் அளவுகொண்ட நிலஅதிர்வு ஏற்பட்டது
டோலாகாவில் மதியம் 12:14 மணிக்கு 4.1 ரிக்டர் அளவுக் கொண்ட நிலஅதிர்வும், 11:36 மணிக்கு 4.2 ரிக்டர் அளவுக்கொண்ட மற்றொரு நிலஅதிர்வும் உணரப்பட்டது.
நேபாளத்தில் கடந்த மாதம் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் பெரிதும் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் ஒன்று டோலாகா ஆகும். நேபாளத்தில் கடந்த மாதம் 25-ம் தேதி சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதை தொடர்ந்து 4.0, மற்றும் அதற்கு அதிகமான அளவுகொண்ட நிலஅதிர்வுகள் 280 முறை ஏற்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.