ஹாலிவுட் பட ஸ்டைலில் லண்டன் லாக்கரில் இருந்து ரூ.184 கோடி நகைகள் திருட்டு
லண்டன்: லண்டனில் உள்ள ஹார்டன் கார்டன் சேப் டெபாசிட் லிமிடெட்டுக்குள் புகுந்த கொள்ளையர்கள் ரூ. 183.6 கோடி மதிப்பிலான நகைகள் மற்றும் வைரங்களை திருடிச் சென்றுள்ளனர்.
இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள டைமண்ட் டிஸ்ட்ரிக்ட்டில் ஹார்டன் கார்டன் சேப் டெபாசிட் லிமிடெட் என்ற தனியார் நிறுவனம் உள்ளது. மக்கள் அந்த நிறுவனத்தில் உள்ள லாக்கர்களில் தங்களின் நகைகள் மற்றும் விலை உயர்ந்த கற்களை பாதுகாப்பாக வைத்துள்ளனர். இந்நிலையில் கடந்த வியாழக்கிழமை இரவு ஹார்டன் கார்டன் ஊழியர்கள் நிறுவனத்தை பூட்டிவிட்டு கிளம்பினர்.
மறுநாள் புனிதவெள்ளி, அடுத்து சனி, ஞாயிறு என்று தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை. இந்த விடுமுறையை பயன்படுத்தி கொள்ளையர்கள் அந்நிறுவனத்திற்குள் வியாழக்கிழமை இரவு புகுந்தனர். அவர்கள் 70 லாக்கர்களை மெதுவாக உடைத்து அதில் இருந்த நகைகள், வைரங்களை திருடிச் சென்றனர். அவர்கள் திருடியவற்றின் மதிப்பு
ரூ. 183.6 கோடி ஆகும்.
இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். திருடப்பட்ட நகைகள், வைரங்கள் ஆகியவை இங்கிலாந்தில் இருந்து வேறு நாட்டுக்கு எடுத்துச் செல்லப்பட்டுவிட்டதாக கூறப்படுகிறது.
இந்த திருட்டு சம்பவம் குறித்து அறிந்த வாடிக்கையாளர்களும் சம்பவ இடத்திற்கு கோபத்துடன் வந்தனர். அந்த லாக்கர்களில் பல நகைக்கடைகாரர்கள் நகைகள், வைரங்களை பத்திரமாக வைத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இகு குறித்து வாடிக்கையாளர்கள் கூறுகையில்,
நாங்கள் லாக்கரில் வைத்திருந்த நகைகள், வைரங்கள் மற்றும் விலை உயர்ந்த கடிகாரங்கள் திருடு போயுள்ளன. ஹார்டன் கார்டன் இணையதளத்தில் அவர்களின் லாக்கர்கள் மிகவும் பாதுகாப்பானவை என்று தெரிவித்துள்ளனர். இது தான் அவர்கள் அளிக்கும் பாதுகாப்பா என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.