ரூ65 லட்சத்தை விழுங்கிய பாம்பு- ரூ1.25 கோடியை தூக்கிக் கொண்டு ஓடிய குரங்கு கூட்டம்.. நைஜீரியாவில்!
நைஜீரியாவில் பணத்தைத் திருடியதாக பாம்பு மற்றும் குரங்குகள் மீது புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அபுஜா: நைஜீரியாவில் சுமார் இரண்டு கோடி ரூபாய் மதிப்பிலான பணத்தை குரங்குக் கூட்டமும், பாம்பும் கொள்ளையடித்ததாக விநோத புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆறாம் அறிவு கொண்ட மனிதர்கள் தான் பணம், நகை போன்ற திருட்டு, கொள்ளை, கொலை போன்ற சம்பவங்களில் ஈடுபடுவர். விலங்குகள் பெரும்பாலும் உணவுப் பொருட்களை மட்டுமே திருடிச் செல்லும்.
ஆனால், கடந்த மாதம் நைஜீரியாவில் பாம்பு ஒன்று 36 மில்லியன் நைரா அளவிலான பணத்தை விழுங்கி விட்டதாக தணிக்கை குழுவில் தெரிவித்தார் பள்ளித் தேர்வு வாரிய பெண் ஊழியர் ஒருவர். இந்த பணத்தின் இந்திய மதிப்பு சுமார் 65 லட்ச ரூபாய் ஆகும்.
இவ்வளவு பெரிய தொகை மாயமானதற்கு அந்த ஊழியர் கூறிய, இந்த பாம்பு காரணத்தை ஏற்க மறுத்த தணிக்கை குழுவினர் மறுத்து விட்டனர். இதனால், அந்த ஊழியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
இந்த சம்பவம் குறித்து ஊடகங்களில் வெளியான செய்தியைத் தொடர்ந்து ஒரு பாம்பால் இந்த அளவு பணத்தைத் திருட முடியுமா என சமூகவலைதளப் பக்கங்களில் நெட்டிசன்கள் கிண்டலடிக்கத் தொடங்கினர்.
திருட்டில் ஈடுபட்டதாகக் கூறப்பட்ட பாம்பு பெயரிலேயே ஒரு டிவிட்டர் பக்கமும் தொடங்கப்பட்டது. பணம் விழுங்கும் பாம்பின் மீது எந்தக் கருணையும் காட்டப்படாது என கழுகு ஒன்று பாம்பை தூக்கிச் செல்லும் புகைப்படத்துடன் நைஜீரிய ஊழல் தடுப்புக் குழு, கேலியாக ஒரு ட்விட்டர் பதிவை பதிலாக வெளியிட்டது.
இந்தப் பரபரப்பு அடங்குவதற்கு முன்னதாகவே, 70 மில்லியன் நைராவைத் திருடியதாக குரங்குக் கூட்டத்தின் மீது புதிய புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய மதிப்பில் இது சுமார் ஓரு கோடியே 26 லட்சத்திற்கு சமமானது ஆகும். பண்ணை வீட்டில் இருந்து இந்தப் பணம் திருடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இது தொடர்பான வழக்குகளை எப்படித் தீர்ப்பது, குற்றவாளிகளை எப்படிக் கைது செய்வது என அந்நாட்டு போலீசார் ஒருபுறம் குழப்பத்தில் இருக்க, நெட்டிசன்கள் தற்போது இந்தக் குரங்குக் கூட்டத்தின் பெயரிலும் டிவிட்டர் பக்கத்தை ஆரம்பித்து கலாய்த்து வருகின்றனர். இது தொடர்பாக பல ஜாலி மீம்ஸ்களும் இணையத்தில் வலம் வருகின்றன.