ஹஜ் யாத்திரை நெரிசலில் சிக்கிய கேரளா மாநிலத்தவர் 13 பேரின் கதி என்ன?
மினா: ஹஜ் யாத்திரையின் கூட்ட நெரிசலில் சிக்கிய கேரளா மாநிலத்தவர் 13 பேரின் கதி என்ன என்பது தெரியவில்லை.
ஹஜ் யாத்திரையின் ஒரு பகுதியாக மினா நகரில் சாத்தான் மீது கல் எறியும் நிகழ்ச்சி நடைபெற்ற போது கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் சிக்கி 717 பேர் பலியாகினர். 800க்கும் அதிகமானோர் படுகாயமடைந்தனர்.
இவர்களில் இந்தியாவில் இருந்து சென்ற 3 தமிழர் உட்பட 15 பேர் பலியாகினர். கேரளாவைச் சேர்ந்த பலர் ரியாத் சென்று அங்கிருந்து ஹஜ் யாத்திரையில் நேரடியாக கலந்து கொண்டிருக்கின்றனர். அவர்களிலும் ஒரு சிலர் உயிரிழந்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்நிலையில் கேரளாவைச் சேர்ந்த 13 பேரின் கதி என்ன என்பது இதுவரை தெரியவில்லை என ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கோழிக்கோடு, கோட்டயம், திக்கோடி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்தவர்கள் இவர்கள்.
இந்த 13 பேர் குறித்த தகவல்களும் செளதியில் உள்ள இந்திய தூதரகத்துக்கு தெரிவிக்கப்பட்டு அவர்களது நிலைமை பற்றிய தகவல்கள் கோரப்பட்டுள்ளன.