ஆய்வகத்தில் ''வளர்க்கப்பட்ட'' செயற்கை மார்பகம்.. புற்று நோய் ஆராய்ச்சிக்காக!
லண்டன்: லண்டனைச் சேர்ந்த ஆய்வாளர்கள் சிலர், மார்பக புற்றுநோய் ஆராய்ச்சிக்காக ஆய்வகத்தில் செயற்கையாக மார்பகங்களை வளர்த்துள்ளனர்.
மனித மார்பகத்தை முப்பரிமாண முறையில் செயற்கை திசுக்களால் இவர்கள் வளர்த்துள்ளனர்.
இதன் மூலம் மார்பகத்தைத் தாக்கும் புற்று நோய் செல்கள் குறித்த ஆய்வை மேலும் துல்லியமாக்கி, அதைத் தடுத்து நிறுத்துவதற்கான வழிமுறைகளைக் கண்டறிய இது உதவும் என்பது ஆய்வாளர்களின் நம்பிக்கையாகும்.
தொழில்நுட்ப சாதனை...
இதுகுறித்து ஸ்டடி லீடர் கிறிஸ்டினா ஷீல் கூறுகையில், ‘இந்த தொழில்நுட்ப சாதனையானது பல ஆய்வுகளுக்கு பேருதவியாக இருக்கும். புற்று நோய் செல்கள் எப்படி மார்பகத்தை தாக்குகின்றன என்பதையும், அதைத் தடுப்பது எப்படி என்பதையும் கண்டுபிடிக்க இந்த செயற்கை மார்பக வளர்ச்சி உதவும்' என்றார்.
ஜெல் மூலம்...
இந்த செயற்கை மார்பகத்தை டிரான்ஸ்பரன்ட் ஜெல் மூலம் உருவாக்கியுள்ளனர். மனித மார்பகங்கள் எப்படி உருவாகி வளர்கின்றனவோ அதேபோல இதையும் வளர்த்துள்ளனர்.
மாற்றம்...
ஒரு பெண்ணின் வாழ்க்கை முழுவதும் அவரது மார்பகமானது தொடர்ந்து மாறிக் கொண்டே வரும். மேலும் பிரசவத்திற்குப் பின்னர் பால் உற்பத்திக்கு ஏற்றவாறு அவரது மார்பகமானது மாறிக் கொள்கிறது. எத்தனை முறை பிரசவித்தாலும் பால் உற்பத்தி தடைபடாமல் இருக்க இதுவே காரணமாகும்.
ஆய்வு...
இதற்கான காரணம் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. தற்போது அதுகுறித்த ஆய்வும் முடுக்கி விடப்பட்டுள்ளது. அதற்கு இந்த செயற்கை மார்பகம் உதவிகரமாக இருக்கும் என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.
ஆச்சர்யம்...
உலக அளவில் செயற்கையாக பெண்ணின் மார்பகத்தை வளர்த்தது இதுவே முதல் முறை என்பதால் ஆய்வாளர்கள் மத்தியில் இது ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது.