அதுக்கெல்லாம் பாலி சரிப்பட்டு வராதே.. ஜகார்த்தாதான் சரி..மிஸ் வேர்ல்ட் அமைப்பாளர்கள்
பாலி: மிஸ் வேர்ல்ட் போட்டியின் இறுதிச் சுற்றை பாலியில் நடத்துவதை விட ஜகார்த்தாவில் நடத்துவதே பொருத்தமாக இருக்கும். இதுதொடர்பாக இந்தோனேசிய அரசை அணுகப் போவதாக மிஸ் வேர்ல்ட் போட்டி அமைப்பாளர்கள் கூறியுள்ளனர்.
முஸ்லீம் அமைப்புகளின் கடும் எதிர்ப்பு மற்றும் போராட்டம் காரணமாக ஜகார்த்தா அருகே நடப்பதாக இருந்த மிஸ் வேர்ல்ட் அழகிப் போட்டியை பாலி தீவுக்கு மாற்றியுள்ளனர் போட்டி அமைப்பாளர்கள்.
இருப்பினும் தற்போது மீண்டும் போட்டியை அல்லது குறைந்தபட்சம் இறுதிப் போட்டியையாவது ஜகார்த்தாவுக்கு மாற்ற வேண்டும் என்று அவர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர். இதுதொட்பாக இந்தோனேசிய அரசை அணுகி உதவி கோரப் போவதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.
இதுகுறித்து போட்டிக்கான செயல் இயக்குநர் நானா புத்ரா கூறுகையில், எல்லாவற்றையும் பாலி தீவிலேயே நடத்துவது பொருத்தமாக இருககாது என கருதுகிறோம்.
அனைத்து வசதிகளையும் ஜாவாவில் செய்துவிட்டு பாலிக்கு மாறுவது என்பது கடினமானதாகவும் உள்ளது.
மேலும் பாலி தீவில் அபெக் உச்சி மாநாடுநடைபெறவுள்ளது. இந்த சமயத்தில் அங்கு மிஸ் வேர்ல்ட் அழகிப் போட்டியையும் நடத்துவது சிரமமாக இருக்கும். எனவே போட்டியை ஜகார்த்தாவில் நடத்துவது தொடர்பாக இந்தோனேசிய அரசை அணுகி கோரிக்கை விடுக்கவுள்ளோம். எப்போது என்று இன்னும் முடிவு செய்யவில்லை. விரைவில் அணுகுவோம் என்றார்.
செப்டம்பர் 28ம்தேதி இறுதிச் சுற்று நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.