லைபீரிய மருத்துவமனையில் இருந்து தப்பியோடிய 17 'எபோலா' நோயாளிகள் கண்டுபிடிப்பு
மான்ரோவியா: லைபீரியாவில் உள்ள மருத்துவ மையம் ஒன்றில் இருந்து தப்பித்துச் சென்ற எபோலா பாதிப்பு இருப்பதாக கருதப்படும் 17 பேர் கண்டுபிடிக்கப்பட்டுவிட்டனர் என்று அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
மேற்கு ஆப்பிரிக்க நாடான லைபீரியாவின் தலைநகர் மான்ரோவியாவில் உள்ள எபோலா மருத்துவ மையம் கடந்த வாரம் சில விஷமிகளால் தாக்கப்பட்டது. அப்போது அங்கிருந்த எபோலா நோயாளிகளின் ரத்தக்கறை படிந்த படுக்கை விரிப்புகள் மற்றும் படுக்கைகளை 17 பேர் எடுத்துச் சென்றுவிட்டதாக செய்திகள் வெளியாகின. அவற்றை யாரும் எடுத்துச் செல்லவில்லை என்றும், அந்த 17 பேர் எபோலா வைரஸ் பாதிப்பு இருப்பதாக கருதப்படும் நோயாளிகள் என்றும் பின்னர் தெரிய வந்தது.
அந்த 17 பேரால் ஏற்கனவே எபோலா வைரஸ் வேகமாகப் பரவும் லைபீரியாவில் மேலும் பாதிப்பு ஏற்படுமோ என்ற அச்சம் ஏற்பட்டது. இந்நிலையில் அந்த 17 பேரையும் கண்டுபிடித்துவிட்டதாகவும், அவர்கள் ஜே.எஃப்.கே. எபோலோ சிறப்பு மருத்துவ மையத்திற்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் லைபீரிய அரசு அறிவித்துள்ளது.
எபோலா வைரஸ் தாக்கி இதுவரை 1, 229 பேர் பலியாகியுள்ளனர் என்று ஐ.நா. தெரிவித்துள்ளது. அதில் லைபீரியாவில் மட்டும் 413 பேர் பலியாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.