60 பயணிகளுடன் மாயமான விமானம் விபத்துக்குள்ளான இடம் கண்டறியப்பட்டது: இந்தோனேசியா
ஜகார்த்தா: இந்தோனேசியாவின் தலைநகர் ஜகார்த்தாவில் இருந்து புறப்பட்டு நடுவானில் 60 பயணிகளுடன் திடீரென மாயமான ஶ்ரீவிஜயா விமானம் விழுந்து நொறுங்கியதாக சந்தேகிக்கப்படும் இடத்தை கண்டறிந்துள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்தோனேசியாவின் ஶ்ரீவிஜயா விமான சேவை 2003-ல் தொடங்கப்பட்டது. இந்தோனேசியாவின் உள்நாட்டு விமான சேவைகளை இந்த நிறுவனம் வழங்கி வந்தது.
இந்தோனேஷியா கடற்கரையில் கிடக்கிறதா ஸ்ரீவிஜயா விமான பாகங்கள்? பொதுமக்கள் தகவலால் பரபரப்பு
4 நிமிடங்களில் மாயம்
இந்த நிலையில் ஜகார்த்தாவின் சொகர்னோ-ஹட்டா விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு 4 நிமிடங்களிலேயே நடுவானில் 10,000 அடி உயரத்தில் திடீரென 60 பயணிகளுடன் ஶ்ரீவிஜயா மாயமானது. இதனையடுத்து விமானத்தைத் தேடும் பணிகள் படுதீவிரமாக மேற்கொள்ளப்பட்டன.
தேடுதல் பணி
ஜகர்த்தா வடக்கே கடலோரம் விமான சிதைவுகள் இருப்பதாக மீனவர்கள் தெரிவித்த் தகவலைத் தொடர்ந்து அங்கு தேடுதல் பணிகள் விடியவிடிய நடைபெற்றன. ஆனால் எந்தவிதமான உறுதியான தகவல்களும் இதுவரை வெளியாகவில்லை. தற்போது அந்த பகுதி முழுவதும் இந்தோனேசிய கடற்படையின் கட்டுப்பாட்டில் உள்ளன.
2-வது நாளாக மீட்பு பணிகள்
இதேபோல் ஜகார்த்தாவின் தவுசண்ட் ஐலேண்ட்ஸ் மாவட்டத்தில் சனிக்கிழமை பிற்பகல் பயங்கர சப்தம் கேட்டதாக அப்பகுதி ஆதிகுடிகள் தெரிவித்திருக்கின்றனர். இது தொடர்பாகவும் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டும் வருகின்றன. நள்ளிரவில் நிறுத்தப்பட்ட தேடல் இன்றும் 2-வது நாளாக தொடருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீட்பில் சிக்கியவை விமான பாகங்கள்?
இதனிடையே விமானம் விழுந்து நொறுங்கிய இடம் கண்டறியப்பட்டுள்ளது எனவும் கடலில் இருந்து மீட்கப்பட்ட பாகங்கள் விமானத்தின் சிதைவுகளாக இருக்கலாம் எனவும் இந்தோனேசிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.