விமானத்திற்கு 'உண்மையில்' என்னாச்சு: மலேசியாவை கேட்கும் சீனா
பெய்ஜிங்: மாயமான விமானம் குறித்து பல வகையான செய்திகள் வருகின்றன. உண்மை நிலவரம் தான் என்ன என்று சீன அரசு மலேசியாவிடம் கேட்டுள்ளது.
கடந்த 8ம் தேதி மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீனா கிளம்பிய விமானம் மாயமானது. விமானத்தை தேடும் பணியில் சீனா, மலேசியா ஆகிய நாடுகள் ஈடுபட்டுள்ளன.
இந்நிலையில் விமானம் கடலில் விழுந்துவிட்டது என்றும், தீப்பிடித்து எரிந்து விட்டது என்றும், தீவிரவாதிகளால் கடத்தப்பட்டது என்றும் பல்வேறு செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளன.
அந்த விமானத்தில் பயணித்த 239 பேரில் 154 பேர் சீனர்கள் என்பதால் சீன அரசு மிகுந்த கவலையில் உள்ளது. இந்நிலையில் அது விமானத்திற்கு என்ன ஆனது என்ற உண்மையை தெரிவிக்குமாறு மலேசியாவிடம் கேட்டுள்ளது.
இது குறித்து சீன வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் கின் காங் கூறுகையில்,
மாயமான விமானம் பற்றி வரும் வதந்திகள் குறித்து ஆய்வு செய்து உண்மையை கண்டுபிடிக்குமாறு மலேசியாவிடம் கேட்டுள்ளோம் என்றார்.
மாயமான விமானத்தை தேடும் பணியில் 42 கப்பல்கள் மற்றும் 39 விமானங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.