25 நாடுகள் சேர்ந்து தேடியும் விமானத்தை கண்டுபிடிக்க முடியலையே... சோகத்தில் மலேசிய அமைச்சர்
கோலாம்பூர்: கிட்டத்தட்ட 25 நாடுகள் இணைந்து தேடியும் மாயமான விமானத்தை கண்டுபிடிப்பது இன்னமும் சிக்கலானதாகவே உள்ளது என மலேசிய போக்குவரத்து அமைச்சர் தெரிவித்துள்ளார்.
கடந்த வாரம் 8ம் தேதி 239 பயணிகளுடன் மாயமானது மலேசிய விமானம் ஒன்று. முதலில் விபத்தில் சிக்கியிருக்கலாம் என கருதப்பட்டது அவ்விமானம். ஆனால், அடுத்தடுத்து கண்டறியப்பட்ட தகவல்களின் அடிப்படையில் விமானம் கடத்தப் பட்டிருக்கலாம் என அஞ்சப் படுகிறது.
தொடர்ந்து பல நாடுகள் தேடுதல் வேட்டையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் காணாமல் போன மலேசிய விமானத்தை தேடும் பணி மேலும் பட இடங்களுக்கு விஸ்தரிப்பு செய்யப்பட்டுள்ளதாக மலேசிய போக்குவரத்து அமைச்சர் ஹிசாமுதின் ஹூசைன் தெரிவித்துள்ளார்.
மேலும், இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
9 நாட்கள் ஆகியும் விமானம் கண்டுபிடிக்காமல் இருப்பது மிகவும் கவலை அளிக்கிறது. மலேசிய விமானத்தில் பயணம் செய்த பயணிகள் மற்றும் விமான ஊழியர்கள் விவரங்கள் குறித்து சேகரித்து வருகிறோம். விமானத்தை கண்டுபிடிப்பது மிகவும் சிக்கலாக உள்ளது.
இந்தத் தேடுதல் வேட்டையில் 25க்கும் அதிகமான நாடுகள் ஈடுபட்டுள்ளன. மேலும், சீனா, அமெரிக்கா, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளின் சேட்டிலைட் மூலம் புதிய தகவல்கள் கிடைக்குமா என காத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால், நாங்களாகவே ஏதேனும் முடிவுக்கு வர விரும்பவில்லை' என இவ்வாறு அவர் கவலைத் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே, காணாமல் போன மலேசிய விமானம் பற்றிய விசாரணையின் போக்கே மாறி உள்ளது என்று மலேசிய காவல் துறை தெரிவித்துள்ளது.