மாயமான விமானம்: பைலட்டுக்கு கடைசியாக வந்த மர்மபோனில் பேசிய கோலாலம்பூர் பெண்
கோலாலம்பூர்: மாயமான மலேசிய விமானம் புறப்படுவதற்கு முன்னதாக அதன் பைலட் ஒருவருக்கு பெண் ஒருவர் போன் செய்ததாக கிடைத்த தகவலால் விமானத் தேடலில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது.
கடந்த 8ம் தேதி ஐந்து இந்தியர்கள் உட்பட 239 பயணிகளுடன் மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து, சீன தலைநகர் பீஜிங் நோக்கி பறந்த மலேசிய விமானம் தெற்கு சீனக்கடலுக்கு மேலே பறந்து கொண்டிருந்த போது திடீரென மாயமானது.
முதலில் விமானம் விபத்தில் சிக்கியிருக்கலாம் எனக் கருதப்பட்டது. ஆனால் தொடர்ந்து கிடைத்த முரண்பட்ட தகவல்களால் விமானம் கடத்தப் பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் உண்டானது. அதனைத் தொடர்ந்து மாயமான விமானத்தை தேடும் பணியில் சுமார் 26 நாடுகளின் விமானங்கள், கப்பல்கள் இறங்கின. சில நாடுகளின் செயற்கைக்கோள்களும் இந்த தேடும் பணியில் ஈடுபட்டுள்ளன.
இந்நிலையில் தெற்கு இந்தியப் பெருங்கடல் பகுதியில் மாயமான விமானத்தின் பாகங்கள் போன்ற பொருட்கள் கிடப்பதாக கிடைத்தத் தகவல்களை அடுத்து சம்பந்தப்பட்ட இடத்தை நோக்கி தேடுதல் பணியில் உள்ள விமானங்கள் மற்றும் கப்பல்கள் விரைந்துள்ளன.
இந்நிலையில் இந்தப் பிரச்சினையில் புதிய திருப்பமாக விமானத்தை ஓட்டிச் சென்ற பைலட் ஷகாரி அகமது ஷாவின் செல்போனுக்கு விமானம் புறப்படுவதற்கு முன்னர் கடைசியாக பெண் ஒருவர் போன் செய்தது கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. அந்த அழைப்பு இரண்டு நிமிடம் பேசப்பட்டுள்ளது.
அப்பெண் அழைத்த செல்போன் நம்பர் குறித்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில் அந்த எண் போலியான முகவரி அளித்து கோலாலம்பூரில் அந்த சிம் கார்டை வாங்கியதாக தெரிய வந்துள்ளது.
போலியான முகவரி கொடுத்து சிம்கார்டு வாங்கிய அப்பெண் யார்? அவர் பைலட்டுடன் கடையாக என்ன பேசினார் என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சமீபத்திய தகவல்களால் விமானம் விபத்தில் சிக்கியிருக்கலாம் எனக் கருதப் படும் நிலையில், இந்த புதிய செல்போன் தகவலால், ஒருவேளை விமானம் விபத்தில் சிக்கியிருந்தால் அதன் பிண்ணனியில் சதிச் செயல் இருக்கலாமோ என்ற சந்தேகம் வலுத்துள்ளது.