ஷார்ஜா சர்வதேச புத்தக கண்காட்சியில் நவ.3-ல் அரசு சிறப்பு விருந்தினராக மு.க.ஸ்டாலின் பங்கேற்பு
ஷார்ஜா சர்வதேச புத்தக கண்காட்சியில் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்க உள்ளார்.
துபை: ஷார்ஜாவில் நவம்பர் 3-ந் தேதி நடைபெறும் சர்வதேச புத்தக கண்காட்சியில் அரசு சிறப்பு விருந்தினராக திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்க உள்ளார்.
ஐக்கிய அரபு அமீரகங்கள், ஷார்ஜா அரசாங்கம் தொடர்ந்து 36 ஆண்டுகளாக மிகப்பெரும் புத்தகக் கண்காட்சியை நடத்தி வருகின்றன. இதில் உலகம் முழுவதிலும் இருந்து அரசியல் தலைவர்கள், அனைத்து மொழிகளைச் சார்ந்த எழுத்தாளர்கள் மற்றும் படைப்பாளிகள் ஷார்ஜா அரசின் விருந்தினர்களாக பங்கேற்றிருக்கின்றனர்.
இந்த ஆண்டு ஷார்ஜா சர்வதேச புத்தக கண்காட்சிக்கு தமிழக சட்டசபை எதிர்க்கட்சி தலைவரும், திமுக செயல் தலைவருமான மு.க.ஸ்டாலினை சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ளுமாறு ஷார்ஜா அரசு அழைப்பு விடுத்திருந்தது. இதை ஏற்றுக் கொண்ட மு.க. ஸ்டாலின் நவம்பர் 3-ந் தேதி வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு நடைபெறும் ஷார்ஜா சர்வதேச புத்தக கண்காட்சி விழாவில் சிறப்பு உரையாற்றுகிறார்.
இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வருகை தரும் ஸ்டாலினை அமீரகத்தில் வாழும் அனைத்து தமிழர்களும் ஒன்றிணைந்து சிறப்பாக வரவேற்கும் ஏற்பாடுகள் பற்றியும், இப்புத்தக விழாவை தமிழர்கள் திருவிழாவாக விமரிசையாக நடத்துவது பற்றியும் அமீரகம் வாழ் அனைத்து தமிழர்கள் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டம் 28-10-2017 அன்று துபை தேரா ரமதா ஹோட்டலில் நடைபெற்றது. இதற்கான ஒருங்கிணைப்பை அரிகேசவநல்லூர் எஸ்.எஸ்.மீரான் செய்திருந்தார்.