தேசிய தினத்தை முன்னிட்டு பாகிஸ்தானில் செல்போன் சேவைகள் நிறுத்தி வைப்பு
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் தேசிய தினத்தை முன்னிட்டு பாதுகாப்பு காரணங்களுக்காக இஸ்லாமாபாத் மற்றும் ராவல்பிண்டியில் ஒரு நாள் செல்போன் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
பாகிஸ்தானில் நாளை தேசிய தினம் கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி தலைநகர் இஸ்லாமாபாத்தில் தேசிய தின கொண்டாட்டங்கள் இடம் பெறவுள்ளன. அப்போது ஆயுதப்படையின் பிரமாண்ட அணிவகுப்பு, சாகச நிகழ்ச்சிகள், முக்கிய ஆயுதங்கள் காட்சிப்படுத்தப்பட உள்ளன.
மேலும் பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் நடைபெறும். இதையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அணிவகுப்பு ஒத்திகை நேற்று நடைபெற்ற போது தீவிரவாதிகள் நாசவேலையில் ஈடுபட முயற்சிக்கலாம் என்ற தகவல் வெளியானது.
எனவே, பாதுகாப்பு கருதி நேற்று இஸ்லாமாபாத் மற்றும் அருகில் உள்ள ராவல்பிண்டி நகரில் செல்போன் சேவைகள் நிறுத்திவைக்கப்பட்டன. இதேபோல் விழா நடைபெறும் புதன்கிழமையன்றும் செல்போன் சேவைகள் நிறுத்திவைக்கப்படும் என பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.