மோடியும், இம்ரான் கானும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்… மலாலா கோரிக்கை
மோடியும், இம்ரான் கானும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்... மலாலா கோரிக்கை
லண்டன்: புல்வாமா தாக்குதலைத் தொடர்ந்து இந்திய பாகிஸ்தான் எல்லையில் போர் பதற்றம் நிலவி வரும் நிலையில் பேச்சுவார்த்தை நடத்துமாறு நோபல் பரிசு பெற்ற மலாலா கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்திய பிரதமர் மோடியும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானும் கைகுலுக்கி பேச்சுவார்த்தை நடத்தினால் மட்டுமே, இருநாடுகளுக்கும் இடையிலான பதற்றம் தணியும் என்றும் வீரமங்கை மலாலா கூறியுள்ளார்.
எல்லைகளில் வசிக்கும் மக்களின் நலன் கருதி இருநாடுகளும் பதற்றத்தைத் தணிக்க முன்வர வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
முடிப்பது கடினம்
போரைத் தொடங்குவது எளிது அதனை முடிப்பது கடினம் எனக் கூறியுள்ள மலாலா, இன்னொரு யுத்தம் தேவையில்லை என்றும் போரால் பல லட்சம் மக்கள் பாதிக்கப்படுவார்கள் என்றும் கூறியுள்ளார்.
|
ட்விட்டரில் கேள்வி
ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ள மலாலாவுக்கு, புல்வாமா தீவிரவாத தாக்குதலின் போது ஏன் கருத்து தெரிவிக்கவில்லை என பலர் கேள்வி எழுப்பினர். அதே நேரம், பாகிஸ்தானின் தீவிரவாத தாக்குதல்களை பொறுமையாக பார்த்துக் கொண்டிருந்தால் அவர்கள் இந்தியாவிடம் வாலாட்டுவதை நிறுத்த மாட்டார்கள் என்றும் உரிய பதிலடி கொடுத்தால் மட்டுமே பின்வாங்குவார்கள் என்றும் பலர் ட்விட்டரில் மலாலாவுக்கு பதிலளித்துள்ளனர்.
ஆதரவு குரல்
மலாலாவின் சமாதான கருத்துக்கு பாகிஸ்தானிலிருந்தும் ஆதரவு குரல் எழுந்துள்ளது. முன்னதாக கருத்து தெரிவித்த இந்திய முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், பொருளாதார வளர்ச்சியை இருநாடுகளும் கருத்தில் கொண்டு போரை விரும்பாமல் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று கருத்து தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
தலீபான் தீவிரவாதிகள்
பெண் கல்வியை வலியுறுத்தி பேசிய பாகிஸ்தானைச் சேர்ந்த மலாலா கடந்த 2012-ஆம் ஆண்டு அந்நாட்டு தலீபான் தீவிரவாதிகளால் சுடப்பட்டார். பின்னர், இங்கிலாந்தில் சிகிச்சை பெற்ற அவர் உடல்நலம் தேறி அங்கேயே கல்வியை தொடர்ந்து வருகிறார்.