இந்தோனேசியா சென்ற பிரதமர் மோடி.. பிஜு பட்நாயக் போல இருநாட்டு உறவை வலுப்படுத்துவாரா?
இந்திய பிரதமர் மோடி நேற்று இந்தோனேசியா சென்றடைந்தார்.
ஜகர்தா: இந்திய பிரதமர் மோடி நேற்று இந்தோனேசியா சென்றடைந்தார். அவரது இந்த பயணத்தை முன்னிட்டு இந்தியா-இந்தோனேசியா உறவின் வரலாற்றை திரும்பி பார்க்க வேண்டியது அவசியமாகிறது.
தன்னுடைய நான்காவது ஆண்டை நிறைவு செய்திருக்கும் பிரதமர் மோடி, தற்போது கிழக்காசிய நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டு இருக்கிறார். சிங்கப்பூர், மலேசியா, இந்தோனேசியா ஆகிய நாடுகளுக்கு அவர் பயணம் செய்துள்ளார். அதன் முதற்கட்டமாக அவர் இந்தோனேசியா சென்றுள்ளார்.
நேற்று மாலை 7 மணிக்கு அவர் இந்தோனேசியா சென்றார். இன்று அவர் அந்நாட்டின் அதிபர் ஜோகோ விடோடோவை சந்திக்கிறார் . இது அவரது முதல் இந்தோனேசியா பயணம் ஆகும்.
பிரதமர் மோடி தன்னுடைய நான்காண்டு ஆட்சியில் இப்போதுதான் முதல்முறையாக இந்தோனேசியா செல்கிறார். ஆனால் இதற்கு முன்பிலிருந்தே, இந்திய அரசியல் தலைவர் ஒருவர் இந்தோனேசியாவுடன் மிகுந்த நல்ல உறவை பேணி வருகிறார். ஒடிசாவில் முன்னாள் முதல்வரும் ஜனதா தளம் கட்சியை சேர்ந்தவருமான பிஜு பட்நாயக் இந்தோனேசியாவில் அதிகம் மதிக்கப்படும் தலைவராக இருக்கிறார்.
அந்நாடு டச்சு பேரரசிடம் அடிமைப்பட்டு இருந்த சமயத்தில் இருந்தே பிஜு பட்நாயக் அந்நாட்டிற்கு மிகவும் நெருக்கமாக இருந்தார். இந்தியா சுதந்திரம் அடைந்த போது, நேருவின் அறிவுரையின் பேரில் பிஜு இந்தோனேசியா சென்று அந்நாட்டின் விடுதலைக்கு உதவினார். அப்போது வீட்டு சிறையில் இருந்த அந்நாட்டின் அதிபரை அவர்தான் விடுவித்தார்.
அப்போதில் இருந்தே அந்நாட்டுக்கும் பிஜு பட்நாயக்கிற்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. அந்நாட்டின் முதல் அதிபர் சுகர்னோவுடன் இவர் நெருக்கமாக இருந்தார். அவரது மகளுக்கு பெயர் வைத்ததே பிஜு பட்நாயக்தான். மழை காலத்தில் பிறந்த அந்த பெண் குழந்தைக்கு, மேகத்தின் மகள் என்று பொருள்படும்படி மேகவதி என்று பெயர் வைத்தார்.
மேலும் 1995ல், பிஜு பட்நாயக்கின் உதவியையும், நட்பையும் பாராட்டும் வகையில் அந்நாட்டின் உயரிய விருதான ''பிண்டாங் ஜாசா உட்டாமா'' விருது அவருக்கு வழங்கப்பட்டது. 1997ல் பிஜு மரணம் அடையும் வரை அந்நாட்டுடன் நெருக்கமாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் தற்போது மோடியும் பிஜு பட்நாயக் போல இருநாட்டு உறவை வலுப்படுத்துவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.