பிரதமர் மோடி - டிரம்ப் இன்று சந்திப்பு... வர்த்தகம், தீவிரவாதம் குறித்து முக்கிய பேச்சுவார்த்தை
அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் மோடி இன்று அதிபர் டொனால்டு டிரம்பை சந்திக்கிறார். அப்போது இருநாடுகள் வர்த்தகம் மற்றும் தீவிரவாதம் குறித்த பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளது.
வாஷிங்டன்: அரசுமுறை பயணமாக அமெரிக்க உள்பட 3 நாடுகளுக்கு பிரதமர் மோடி சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
போர்ச்சுக்கல், அமெரிக்கா, நெதர்லாந்து ஆகிய மூன்று நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள டெல்லியில் இருந்து விமானம் மூலம் கடந்த 24ம் தேதி புறப்பட்டார்.
பிரதமரின் இந்த சுற்றுப்பயணத்தின் முதற்கட்டமாக போர்ச்சுகல் நாட்டுக்குச் சென்றார். அங்கு பிரதமர் மோடிக்கு அந்நாட்டு பிரதமர் அண்டோனியோ கோஸ்டா விருந்தளித்தார். இதனைத் தொடர்ந்து இருநாட்டு உறவுகள் குறித்தும் வர்த்தகம், தொழில்நுட்பம் உள்ளிட்ட துறைகளில் பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.
அமெரிக்க பயணம்
இதனைத்தொடர்ந்து மோடி அமெரிக்காவிற்கு சென்றார். அங்கு அவருக்கு சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து வாஷிங்டன் வாழும் இந்தியர்கள் பிரதமருக்கு உற்சாக வரவேற்பை அளித்தனர்.
சந்திப்பு
இந்நிலையில் அமெரிக்க அதிபர் டிரம்பை வெள்ளை மாளிகையில் நேரில் சந்திக்கிறார். இந்த சந்திப்பின்போது ராணுவ கூட்டுறவு, சர்வதேச அளவிலான உறவு, வர்த்தகம், எரிசக்தி துறை தொடர்பான விஷயங்கள் பற்றி ஆலோசனை நடத்தப்பட உள்ளது.
விருந்து
பின்னர். அதிபர் டிரம்ப் மோடிக்கு இரவு விருந்து அளிக்கிறார். டிரம்ப் அதிபராக பதவியேற்ற பின், வெளிநாட்டு தலைவர் ஒருவருக்கு வெள்ளை மாளிகையில் விருந்து அளிப்பது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடதக்கது.
உண்மையான நண்பர்
முன்னதாக, மோடியை வரவேற்று டிரம்ப் தனது டுவிட்டர் பக்கத்தில் நேற்று பதிவிட்டிருந்தார். தனது உண்மையான நண்பரான மோடியிடம் பல ராஜதந்திர விஷயங்கள் குறித்து விவாதிக்க உள்ளதாகவும் பதிவிட்டுள்ளார்.