வாசகர்களின் ஆதரவைப் பெற்றாலும் மோடியை நிராகரித்த 'டைம்ஸ்' எடிட்டர்கள்!
நியூயார்க்: டைம் பத்திரிக்கையின் ஆண்டின் சிறந்த மனிதர் போட்டியில் இருந்து பிரதமர் நரேந்திர மோடி வெளியேற்றப்பட்டுள்ளார். வாசகர்கள் வாக்கெடுப்பில் வெற்றி பெற்ற மோடியால் பத்திரிக்கையின் ஆசிரியர்களின் மனதை கவர முடியவில்லை.
அமெரிக்காவைச் சேர்ந்த டைம் பத்திரிக்கை ஆண்டுதோறும் ஆண்டின் சிறந்த மனிதரை தேர்வு செய்ய வாசகர்களிடம் வாக்கெடுப்பு நடத்தி முடிவை அறிவிக்கும். இந்த ஆண்டும் டைம் பத்திரிக்கை வாசகர்களிடையே வாக்கெடுப்பு நடத்தியது.
வாசகர்கள் 50 உலக தலைவர்கள் மற்றும் நிறுவனங்களின் சிஇஓக்களில் தங்களுக்கு பிடித்த நபர்களுக்கு வாக்களித்தனர்.
வாக்கெடுப்பு
நவம்பர் 19ம் தேதி துவங்கிய வாசகர்கள் வாக்கெடுப்பு டிசம்பர் 6ம் தேதி வரை நடைபெற்றது. வாசகர்கள் வாக்களித்த 50 பேரில் ஒரே இந்தியர் பிரதமர் மோடி தான்.
மோடி
வாசகர்கள் ஃபேஸ்புக், ட்விட்டர் மற்றும் டைம் பத்திரிக்கை இணையதளத்தில் தங்களுக்கு பிடித்த நபர்களுக்கு வாக்களித்தனர். இந்த வாக்கெடுப்பில் 50 லட்சம் வாக்குகள் பெற்று மோடி வெற்றி பெற்றார்.
இறுதி பட்டியல்
டைம் பத்திரிக்கை ஆசிரியர்கள் இந்த ஆண்டின் சிறந்த மனிதர் போட்டிக்கான இறுதி பட்டியலை தேர்வு செய்துள்ளனர். 8 பேர் அடங்கிய அந்த பட்டியலில் மோடியின் பெயர் இல்லை. வாசகர்களை கவர்ந்த மோடியால் ஆசிரியர்களை கவர முடியாமல் போனது. இறுதி பட்டியலில் மோடியின் பெயர் இல்லாததை பார்த்து அவரது ஆதரவாளர்கள் கவலை அடைந்துள்ளனர்.
டிம் குக்
இறுதி பட்டியலில் அலிபாபா குழும தலைவர் ஜாக் மா, எபோலா நோயாளிகளை கவனித்துக் கொள்பவர்கள், ரஷ்ய அதிபர் புதின், ஆப்பிள் சிஇஓ டிம் குக், பெர்குஷன் போராட்டக்காரர்கள். பாடகி டெய்லர் ஸ்விப்ட், தேசிய கால்பந்து லீக் கமிஷனர் ராஜர் ஸ்டோக் குடெல், குர்திஸ்தானைச் சேர்ந்த அரசியல் தலைவர் மசூத் பர்சானி ஆகியோரின் பெயர்கள் உள்ளன.
நாளை அறிவிப்பு
2014ம் ஆண்டின் சிறந்த மனிதரை டைம் பத்திரிக்கையின் ஆசிரியர்கள் தேர்வு செய்து நாளை அறிவிப்பார்கள். டைம் பத்திரிக்கை 1927ம் ஆண்டில் இருந்து ஆண்டின் சிறந்த மனிதரை தேர்வு செய்து அறிவித்து வருகிறது.
காந்தி
1930ம் ஆண்டு டைம் பத்திரிக்கையின் அந்த ஆண்டின் சிறந்த மனிதராக மகாத்மா காந்தி தேர்வு செய்யப்பட்டார். அதன் பிறகு இதுவரை ஒரு இந்தியர் கூட தேர்வு செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.