டிஜிட்டல் இந்தியா.. மோடியின் தொலைநோக்கு பார்வை சிறப்பாக உள்ளது: மைக்ரோசாப்ட் சி.இ.ஓ புகழாரம்
சிலிக்கான்வேலி: நரேந்திரமோடியின் தொலைநோக்கு பார்வை சிறப்பாக உள்ளது, அவர் சரியான வழியில் செல்கிறார் என்று மைக்ரோசாப்ட் நிறுவன சி.இ.ஓ (தலைமைச் செயல் அதிகாரி) சத்யா நாதல்லா தெரிவித்தார்.
அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி, சனிக்கிழமை இரவு, நியூயார்க்கில் நடைபெற்ற ஜி-4 நாடுகள் மாநாட்டில் பங்கேற்றார். 10 வருடங்களுக்கு பிறகு இம்மாநாட்டை இந்தியா நடத்தியது.
பிரேசில், ஜெர்மனி, ஜப்பான் மற்றும் இந்தியா ஆகியவற்றை உறுப்பு நாடாக கொண்ட ஜி-4 அமைப்பின் மாநாட்டில், இந்தியா உள்ளிட்ட ஜனநாயக நாடுகளுக்கு ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இடம் தர வேண்டும் என்று மோடி வலியுறுத்தி பேசினார்.
இதையடுத்து நியூயார்க்கில் இருந்து விமானம் மூலம், அமெரிக்காவின் மேற்குகடற்கரை பகுதிக்கு விரைந்தார். சிலிக்கான்வேலியில் டெஸ்லா மோட்டார்ஸ் நிறுவனத்தை மோடி சுற்றி பார்த்து, விவரங்கள் கேட்டறிந்தார்.
இதையடுத்து, இந்திய நேரப்படி காலை 6 மணிக்கெல்லாம், ஆப்பிள் நிறுவன சி.இ.ஓ டிம் குக்கை சந்தித்தார் மோடி. 15 நிமிடங்கள், நடந்த இந்த சந்திப்பின்போது, இந்தியாவுக்கு தொழில் தொடங்க வருமாறு மோடி அழைப்புவிடுத்தார்.
PM Narendra Modi at the Digital India dinner with Satya Nadella #ModiInUSA pic.twitter.com/fyK0AOiOGW
— ANI (@ANI_news) September 27, 2015
இதன்பிறகு மைக்ரோசாப்ட் நிறுவன சி.இ.ஓ சத்யா நாதல்லாவை மோடி சந்தித்தார். முன்னதாக சத்யா நாதல்லா சில இந்திய மீடியாக்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: இந்தியாவுடன் இணைந்து செயல்பட நான் விரும்புகிறேன். இந்தியாவில் மைக்ரோசாப்ட் 20 வருடங்களாக செயல்பட்டு வருகிறது. இந்திய தொழில்முனைவோர் உலக தரம் உள்ளவர்கள். இந்தியாவிலுள்ள மனித வளம் உலக தரமானது.
டிஜிட்டல் இந்தியா குறித்த, நரேந்திரமோடியின் தொலைநோக்கு பார்வை மிகச்சரியானது. அவர் சரியான வழியில் கொள்கைகளை புகுத்திக்கொண்டுள்ளார். கிராமங்களையும் இணையத்தால் இணைக்க முயல்கிறார்.
இவ்வாறு சத்யா நாதல்லா தெரிவித்தார். இவர் ஹைதராபாத்தில் பிறந்து மைக்ரோசாப்ட் சி.இ.ஓவாக உயர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.