காலிஸ்தான் தனிநாடு கோரும் சீக்கியர் அமைப்புகளை ஒடுக்குங்கள்: இங்கிலாந்திடம் மோடி வலியுறுத்தல்!!
லண்டன்: இந்தியாவில் சீக்கியர்கள் வாழும் பகுதிகளை ஒருங்கிணைத்து காலிஸ்தான் தனிநாடு கோரும் பிரசாரத்தை இங்கிலாந்தில் நடத்தி வரும் சீக்கியர் அமைப்புகளை ஒடுக்க வேண்டும் என்று அந்நாட்டு பிரதமர் கேமரூனிடம் பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி 3 நாள் பயணமாக இங்கிலாந்து சென்றுள்ளார். அவருக்கு எதிராக சீக்கியர்கள், தமிழர்கள் உட்பட நூற்றுக்கணக்கான இந்தியர்கள் போராட்டங்களை நடத்தினர்.
இந்நிலையில் இங்கிலாந்து பிரதமர் கேமரூனை சந்தித்து பேசிய பிரதமர் மோடி, இங்கிலாந்தில் செயல்படும் சீக்கிய தீவிரவாத அமைப்புகளை ஒடுக்க கடும் நடவடிக்கை தேவை என வலியுறுத்தியுள்ளார்.
இந்தியாவில் பஞ்சாப் மற்றும் சீக்கியர் வாழும் பகுதிகளை ஒருங்கிணைத்து காலிஸ்தான் தனிநாடு கோரி முன்னர் ஆயுதப் போராட்டம் நடைபெற்றது. 1980களின் தொடக்கத்தில் இந்த ஆயுதப் போராட்டம் முடிவுக்கு வந்தாலும் அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து நாடுகளில் குடியேறிய சீக்கியர்கள் இந்த பிரசாரத்தை தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.
இந்த கோரிக்கையை வலியுறுத்தும் டிவி சேனல்களைக் கூட இங்கிலாந்தில் சீக்கியர் அமைப்புகள் தொடங்கியுள்ளன. பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ. உடன் சேர்ந்து இந்தியாவில் நாசவேலைகளுக்கு இந்த காலிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளனர்.
இதனால் இந்த அமைப்புகளை இங்கிலாந்து அரசு ஒடுக்க வேண்டும் என்று கேமரூனிடம் பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார்.