இஸ்ரேலுக்கு சென்ற முதல் இந்திய பிரதமர்.. வரலாற்றில் இடம்பிடித்தார் மோடி!
டெல் அவில்: இஸ்ரேல் நாட்டுக்கு முதன் முதலாக சென்ற பிரதமர் நரேந்திர மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்திய பிரதமர் இஸ்ரேல் செல்வது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய பிரதமர் நரேந்திர மோடி மூன்று நாள் அரசு முறை பயணமாக இஸ்ரேல் சென்றடைந்தார். அங்குள்ள பென் குரியான் விமான நிலையத்துக்கு நேரில் சென்ற இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாஹு நேரில் சென்று வரவேற்றார். அவர் அமெரிக்க ஜனாதிபதி, போப் ஆண்டவர் தவிர வேறு யாரையும் விமான நிலையத்திற்கு வந்து வரவேற்பது இல்லை என்பது கவனிக்கதக்கது.
இஸ்ரேலுக்கும் தூதரக உறவு ஏற்பட்டு 25 ஆண்டுகள் நிறைவையொட்டி அதன் நினைவாக இந்த பயணம் என்பது கவனிக்கத்தக்கது. அதோடு இஸ்ரேல் நாட்டுக்கு இந்திய பிரதமர் செல்வது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
இஸ்ரேலுடன், விவசாயம் மற்றும் தண்ணீர், கண்டுபிடிப்புகள், வளர்ச்சி, அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், விண்வெளி ஆகிய துறைகளில் இந்தியா ஒப்பந்தங்கள் செய்துகொள்ளும் என தெரிகிறது. இதுதவிர இரு நாட்டு மக்களிடையே தொடர்புகளை ஏற்படுத்துவது, விமான போக்குவரத்து, முதலீடு ஆகியவைகளை வலுப் படுத்துவதற்கான வழிகள் குறித்தும் ஆலோசனை நடத்தப்படும் என்று தெரிகிறது.
மோடியின் இஸ்ரேல் பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. சீனா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளின் ராணுவ அச்சுறுத்தலை எதிர்கொள்ள இந்தியா இஸ்ரேலிடம் இருந்து ஆயுதங்களை இறக்குமதி செய்து வருகிறது. குறிப்பாக, ஆண்டு ஒன்றிற்கு மட்டும் சுமார் 1 பில்லியன் டொலர் மதிப்பிலான ஆயுதங்களை இஸ்ரேல் நாட்டிடம் இருந்து இந்தியா பெற்று வருகிறது. இரு நாடுகளுக்கு இடையே பல முக்கிய உறவுகளை உறுதிப்படுத்துவது குறித்து இரு தலைவர்களும் ஆலோசனை நடத்துவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.