அமீரகத்தின் "புகையில்லா" நகரில் மோடி... மஸ்தார் நகரைச் சுற்றிப் பார்த்து வியந்தார்
மஸ்தார் நகர், ஐக்கிய அரபு எமிரேட்ஸ்: ஐக்கிய அரபு எமிரேட்ஸிலேயே புகையில்லாத நகரம் என புகழப்படும் மஸ்தார் நகருக்கு பிரதமர் நரேந்திர மோடி இன்று விஜயம் செய்தார்.
அமீரகத்தில் 2 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி இன்று மஸ்தார் நகருக்கு விஜயம் செய்தார். அங்கு வைக்கப்பட்டிருந்த டிஜிட்டல் வருகையாளர் பதிவுப் புத்தகத்தில் (மானிட்டரில்) அவர் டிஜிட்டல் முறையில், அறிவியலே வாழ்க்கை என்று எழுதி கையெழுத்திட்டார்.
அபுதாபியிலிருந்து 17 கிலோமீட்டர் தொலைவில் மஸ்தார் நகரம் உள்ளது. இது திட்டமிட்டு உருவாக்கப்பட்ட நகரமாகும். இங்கு புகைக்கு இடமே இல்லை. கார்பன் இல்லாத நகரம் என்றும் இதற்குப் பெயர் உண்டு.
இந்த நகரம் குறித்து அதிகாரிகளும், ஆய்வாளர்களம் மோடிக்கு விளக்கம் அளித்தனர். பின்னர் நகரை சுற்றிப் பார்த்துப் பார்வையிட்டார் மோடி.
முற்றிலும் சூரிய ஒளி மின்சாரம் மற்றும் பிற புதுப்பிக்கக் கூடிய எரிபொருள் ஆதாரங்களை கொண்டே இந்த நகரம் முழுவதும் இயங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
பின்னர் பல்வேறு வர்த்தக நிறுவனங்களின் தலைவர்களுடன் முதலீடுகள் குறித்தும் மோடி உரையாற்றினார். இந்த நிகழ்ச்சியைத் தொடர்ந்து அபுதாபியின் பட்டத்து இளவரசர் ஷேக் முகம்மது பின் ஜயத் அல் நஹ்யானைச் சந்தித்துப் பேசுகிறார் பிரதமர் மோடி. பிறகு அபுதாபியின் ஆட்சியாளருடன் மதிய உணவு உட்கொள்ளும் மோடி, துபாய்க்குப் புறப்பட்டுச் செல்கிறார்.