நவாஸ் ஷெரீபின் தாய் மறைவுக்கு... பிரதமர் மோடி இரங்கல் கடிதம் அனுப்பினார்... பாக்.பத்திரிக்கை தகவல்!
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீபின் தாய் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து இந்திய பிரதமர் மோடி கடிதம் அனுப்பியதாக பாகிஸ்தானின் டான் பத்திரிக்கை செய்தி வெளியிட்டது.
பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதரகத்தில் இருந்து நவாஸ் ஷெரீபின் மகள் உள்பட 2 பேருக்கு இந்த கடிதம் அனுப்பப்பட்டதாகவும், அந்த கடிதத்தில் பிரதமர் எழுதிய விவரத்தையும் டான் பத்திரிக்கை கூறியுள்ளது.
காஷ்மீர் பிரச்சினை, இந்தியா மீது பயங்கரவாதிகள் தாக்குதல் உள்ளிட்ட பிரச்சினைகளால் தற்போது இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே எந்த உறவும் இல்லாத நிலையில், பாகிஸ்தான் முன்னாள் பிரதமருக்கு, மோடி கடிதம் அனுப்பியதாக வந்துள்ள தகவல் பல்வேறு எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி உள்ளது.
சிறையில் அடைப்பு
பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப். பனாமா கேட் ஊழல் வழக்கில் தொடர்புடைய இவருக்கு அந்நாட்டு சுப்ரீம் கோர்ட்டு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கியது. அதன்பின்பு லாகூரில் உள்ள மத்திய சிறையில் அடைக்கப்பட்ட நவாஸ் ஷெரீப்புக்கு சிறையில் திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது.இதையடுத்து அவர் கோர்ட்டு அனுமதி பெற்று மேல் மருத்துவ சிகிச்சைகாக இங்கிலாந்து தலைநகர் லண்டன் சென்றார். ஆனால் கோர்ட்டு வழங்கிய ஜாமீன் காலம் முடிந்த பிறகும் அவர் லண்டனிலேயே உள்ளார்.
நவாஸ் ஷெரீபின் தாய் பேகம் ஷமிம் அக்தர் கடந்த பிப்ரவரி மாதம் லண்டன் சென்று மகனுடன் தங்கியிருந்தார்.
மோடி அனுப்பினார்?
இதற்கிடையே கடந்த மாதம் 22-ம் தேதி பேகம் ஷமிம் அக்தர் லண்டனில் உடல்நலக் குறைவால் காலமானார். இந்த நிலையில் பேகம் ஷமிம் அக்தரின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி நவாஸ் ஷெரீப்புக்கு இரங்கல் கடிதம் ஓன்று அனுப்பியதாக பாகிஸ்தானின் தி டான் பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது.
கடிதம் பெற்றார்?
இது தொடர்பாக அந்த பத்திரிக்கை வெளியிட்ட செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது:-
இந்திய பிரதமர் நரேந்திர மோடி பாகிஸ்தான் முஸ்லிம் லீக் தலைவர் நவாஸ் ஷெரீப்பின் தாய் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில், நவாஸ் ஷெரீப்புக்கு கடிதம் எழுதினார்.பிரதமர் மோடி எழுதிய இந்த கடிதம் பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய தூதரகத்தில் இருந்து நவாஸ் ஷெரிப்பின் மகள் மற்றும் பாகிஸ்தான் முஸ்லீம் லீக்-நவாஸ் (பி.எம்.எல்-என்) துணைத் தலைவர் மரியம் நவாஸ் ஆகியோருக்கு அனுப்பபட்டு உள்ளது என அந்த பத்திரிக்கை கூறியுள்ளது.
பிராத்திக்கிறேன்
மேலும் நவம்பர் 27-ம் தேதி என குறிப்பிட்டுள்ள அந்த கடிதத்தில் , 'அன்புள்ள மியான் சாஹிப், நவம்பர் 22 ஆம் தேதி லண்டனில் உங்கள் தாயார் பேகம் ஷமிம் அக்தரின் மறைவை அறிந்து நான் மிகவும் வேதனை அடைந்தேன். இந்த கடினமான நேரத்தில் உங்கள் துயரத்தில் நானும் பங்கு கொள்கிறேன். ஈடுசெய்ய முடியாத இந்த இழப்பைச் சுமக்க உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினருக்கும் பலம் அளிக்கும்படி இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்' என்று பிரதமர் மோடி கூறியுள்ளதாகவும் டான் பத்திரிக்கை தகவல் தெரிவித்துள்ளது.
உறவில் விரிசல்
ஆனால் இந்த கடிதம் குறித்து இந்திய தூதரகம் தரப்பில் இருந்து எந்த அதிகாரபூர்வ தகவலும் வெளிவரவில்லை. 2011-ல் பாகிஸ்தானில் இருந்து வந்த பயங்கரவாதிகள் இந்தியாவின் வர்த்தக தலைநகரான மும்பையில் தாக்குதல் நடத்திய பிறகு, பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் உள்ள உறவில் விரிசல் ஏற்பட்டது. அதன்பிறகு 2016-ல் இந்தியாவின் பதன்கோட் விமானபடை தளம் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய பிறகு இந்நாட்டு உறவில் மேலும் விரிசல் ஏற்பட்டது.கடந்த ஆண்டு காஷ்மீரில் புல்வாமாவில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் இந்திய ராணுவ வீரர்கள் பலர் வீர மரணம் அடைந்தனர்.
புதிய எதிர்பார்ப்பு
அதன்பிறகு இந்தியா-பாகிஸ்தான் உறவு மேலும் மோசம் அடைந்தது. பாகிஸ்தான் தொடர்ந்து பயங்கரவாதிகளை ஊக்கப்படுத்தி வருகிறது என இந்தியா குற்றம்சாட்டி வருகிறது. தற்போது இரு நாடுகளுக்கும் இடையில் எந்த உறவும் இல்லை. இந்த நிலையில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் தாய் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து மோடி கடிதம் எழுதி உள்ளதாக தகவல் வருவது இந்தியா-பாகிஸ்தான் உறவில் புதிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
நல்ல நட்புறவு
நவாஸ் ஷெரிப் பாகிஸ்தான் பிரதமராக இருந்த காலத்தில் பிரதமர் மோடி அவருடன் நல்ல உறவு கொண்டிருந்தார். கடந்த 2015-ல் ஆப்கானிஸ்தானில் இருந்து இந்தியா திரும்பும் வழியில் பிரதமர் மோடி லாகூருக்கு திடீரென பயணம் மேற்கொண்டார். நவாஸ் ஷெரிப் மகளின் திருமணத்தில் கலந்து கொண்டார். பல ஆண்டுகளுக்கு பிறகு பாகிஸ்தான் சென்ற இந்திய பிரதமர் என்ற பெருமையை மோடி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.