மாயமான மலேசிய விமானத்தில் மோகன் குமாரமங்கலம் பேரனும் பயணம்!
துபாய்: மாயமாகிப் போன மலேசிய விமானத்தில் மறைந்த முன்னாள் அமைச்சர் மோகன் குமாரமங்கலத்தின் மகள்வழிப் பேரனும் அவரது மனைவியும் பயணம் செய்ததும் உறுதிபடுத்தப்பட்டுள்ளது.
இந்திரா காந்தி காலத்தில் அமைச்சராக இருந்தவர் மோகன் குமாரமங்கலம். 1973ஆம் ஆண்டு டெல்லியில் நிகழ்ந்த விமான விபத்தில் மோகன் குமாரமங்கலம் உட்பட 48 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்த மோகன் குமாரமங்கலத்தின் மகன்தான் மறைந்த ரங்கராஜன் குமாரமங்கலம். இவர் நரசிம்மராவ் மற்றும் வாஜ்பாய் அமைச்சரவைகளில் பணியாற்றினார்.
ரங்கராஜன் குமாரமகங்கலத்தின் சகோதரியான உமா முகர்ஜி துபையில் வசித்து வருகிறார். உமா முகர்ஜியின் மகன் முக்தேஸ் முகர்ஜியும் அவரது மனைவி ஜியாஅமாவோ பாயும் மாயமான மலேசிய விமானத்தில் பயணம் செய்துள்ளனர். இந்த விமானம்தான் திடீரென மாயமாகிப் போனது. கடந்த சில நாட்களாக பல நாட்டு விமானங்கள், போர்க்கப்பல்கள் இந்த விமானத்தை இன்னமும் தேடி வருகின்றன.
41 ஆண்டுகளுக்குப் பின்னர் மோகன் குமாரமங்கலத்தின் குடும்பத்தில் மீண்டும் ஒரு விமான விபத்து சோகம் தற்போது தொற்றிக் கொண்டிருக்கிறது.