கேன்சருடன் போராடி வென்று மகனை காத்து உமரின் தோட்டாக்களுக்கு பலியான தாய்
ஆர்லான்டோ: ஆர்லான்டோவில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் தனது மகனை காத்து ஒரு தாய் பலியாகியுள்ளார்.
அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள ப்ரூக்லினில் பிறந்தவர் பிரென்டா லீ மார்க்கெஸ் மெக்கூல்(49). 11 குழந்தைகளின் தாயான அவருக்கு சால்சா நடனமாட பிடிக்கும். அவரின் மகன் இசையா ஹென்டர்சன்(21) ஒரு ஓரினச்சேர்க்கையாளர்.
நியூயார்க், கலிபோர்னியாவில் வசித்து வந்த பிரென்டா தனது பிள்ளைகளுடன் சேர்ந்து இருக்க அண்மையில் ஆர்லான்டோ நகரில் குடியேறினார். பிரென்டா இசையாவுடன் சேர்ந்து ஆர்லான்டோவில் இருக்கும் பல்ஸ் ஓரினச்சேர்க்கையாளர் கிளப்புக்கு அடிக்கடி செல்வார்.
அங்கு அவர் தனது மகனுடன் நடனம் ஆடுவார். கடந்த சனிக்கிழமை இரவும் அவர் இசையாவுடன் பல்ஸ் கிளப்புக்கு சென்றபோது உமர் மாட்டீன் துப்பாக்கியுடன் அங்கு வந்ததை பார்த்தார். உடனே தனது மகனை தரையில் படுக்குமாறு கூறிவிட்டு அவரின் உயிரை காத்து உமரின் தோட்டாக்களுக்கு தனது உயிரை இழந்தார்.
உமர் சுட்டதில் பிரென்டா மீது இரண்டு தோட்டாக்கள் பாய்ந்து அவர் பலியானார். இசையாவை போலீசார் பத்திரமாக மீட்டனர். இரண்டு வகையான புற்றுநோயுடன் போராடி வென்ற பிரென்டாவை பறிகொடுத்த இசையா சோகத்தில் ஆழ்ந்துள்ளார்.