சட்டென மாறிய வானிலை.. ஹாங்காங்கில் ‘பணமழை’.. மக்கள் ஹேப்பி.. இளைஞர் கைது!
பணமழை பொழிய வைத்த இளைஞரை ஹாங்காங் போலீசார் கைது செய்துள்ளனர்.
ஹாங்காங் : சீனாவில் அடுக்குமாடி உச்சியில் நின்று பணமழை பெய்ய வைத்த இளைஞரைப் போலீசார் கைது செய்துள்ளனர்.
சீனாவின் ஹாங்காங் பகுதியைச் சேர்ந்தவர் வாங் சிங் கிட் (24). இளம் தொழிலதிபரான அவர், கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்து பல கோடிகளுக்கு அதிபதியானார்.
இந்நிலையில், சமீபத்தில் ஷாம் ஷூ போ என்ற மாவட்டத்திற்கு தனது ஆடம்பரக் காரில் சென்ற வாங், அங்குள்ள உயரமான அடுக்குமாடிக் கட்டிடத்தின் உச்சிக்கு சென்றார். பின்னர் அங்கிருந்தபடி, கட்டுக்கட்டாக பணத்தை கீழே வீசி எறிந்தார். இதனால் அப்பகுதியில் பணமழை போன்று பணம் பறந்து கீழே விழுந்தது.
திடீரென பணமழை பொழிந்ததால், அப்பகுதியில் சென்றவர்கள் இன்ப அதிர்ச்சி அடைந்தனர். பறந்து வந்த பணத்தை பிடிக்க அவர்கள் முயற்சித்தனர். தகவல் அறிந்து அதிக அளவில் மக்கள் அப்பகுதியில் கூடினர். மக்கள் ஒருவருக்கொருவர் சண்டை போட்டுக்கொண்டு பணத்தை சேகரித்தனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பான சூழல் ஏற்பட்டது.
இந்தக் காட்சிகளை சிலர் வீடியோவாக எடுத்து இணையத்தில் பகிர்ந்தனர். அவை சமூகவலைதளங்கில் வைரலாகியது.
இதையடுத்து பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்ததாக கூறி வாங்கை ஹாங்காங் போலீசார் கைது செய்தனர். விசாரணையில் ஏற்கனவே அவர் மீது மேலும் சில மோசடி புகார்கள் இருப்பது தெரிய வந்தது. ஏன் தன்னிடம் இருந்த பணத்தை இப்படி தூக்கி எறிந்து பரபரப்பை ஏற்படுத்தினார் என தொடர்ந்து அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.