கடுங்குளிரில் இறக்கிவிடப்பட்ட தாய்.. விஸ்வரூபம் எடுத்த மக்கள் போராட்டம்.. மங்கோலிய பிரதமர் ராஜினாமா
உலான்பாதர்: மங்கோலியாவில் மைனஸ் 25 டிகிரி வெப்ப நிலையில் தாய் ஒருவர் தனது குழந்தையுடன் ஆம்புலன்ஸிலிருந்து இறக்கி, நடக்க வைக்கப்பட்ட வீடியோ வைரலானதைத் தொடர்ந்து அந்நாட்டின் பிரதமர் குரேல்சுக் உக்னா ராஜினாமா செய்துள்ளார்.
கிழக்கு ஆசியாவில் ரஷ்யாவுக்கும் சீனாவுக்கும் நடுவே அமைந்துள்ள குட்டி நாடுக மங்கோலியா. இந்நாட்டில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த கடந்தாண்டு முதல் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.
முதலில் வெளிநாட்டிலிருந்து வருபவர்களுக்கு மட்டும் தடை விதிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து கடந்த நவம்பர் மாதம் மங்கோலியாவில் உள்நாட்டிலும் ஒரு மாகாணத்திலிருந்து மற்றொரு மாகாணத்திற்குச் செல்லவும் தடை விதிக்கப்பட்டது. இதனால் ஆயிரக் கணக்கான மக்கள் தலைநகரில் முடங்கியுள்ளனர்.
வைரல் வீடியோ
இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் அந்நாட்டின் பிரபல செய்தி நிறுவனம் வீடியோ ஒன்றை வெளியிட்டது. அதில் புதிதாகக் குழந்தை பெற்றெடுத்த ஒரு பெண், அவரது குழந்தையுடன் ஆம்புலன்ஸில் இருந்து இறக்கி, கொரோனா வார்ட்டுக்கு அழைத்துச் செல்லப்படுகிறார்.
போராட்டம்
அப்போது அங்கு மைனஸ் 25 டிகிரி வெப்ப நிலை நிலவியுள்ளது. இருப்பினும், அந்த தாய்க்கு முறையான பாதுகாப்பு உடைகள் வழங்கப்படவில்லை. வெறும் ஹாஸ்பிட்டல் பைஜாமாக்களையும் பிளாஸ்டிக் செருப்புகளையும் மட்டுமே அவர் அணிந்திருந்தார். இந்த வீடியோ வெளியானதைத் தொடர்ந்து, மங்கோலியாவில் மிகப் பெரியளவில் அரசுக்கு எதிராகப் போராட்டம் வெடித்தது.
பிரதமர் ராஜினாமா
மங்கோலிய நாட்டின் வழக்கப்படி தாய்மார்கள் குழந்தை பெற்றெடுத்த முதல் மாதம் குளிரையும் குளிரூட்டப்பட்ட உணவுகளையும் எடுத்துக் கொள்ளக்கூடாது. இந்தப் பிரச்னை விஸ்வரூபம் எடுத்ததைத்தொடர்ந்து, இன்று அந்நாட்டின் பிரமதர் குரேல்சுக் உக்னா ராஜினாமா செய்தார். இது குறித்து அவர் கூறுகையில், "துரதிர்ஷ்டவசமாக, அந்த தாயை இடமாற்றம் செய்யும் போது நாங்கள் தவறு செய்தோம். பிரதமராக இதற்கு நான் பொறுப்பேற்று நான் பதவி விலகுகிறேன்" என்றார்.
அமைச்சர்களும் ராஜினாமா
ஏற்கனவே, இந்தப் பிரச்னை தொடர்பாக அந்நாட்டின் துணைப் பிரதமர், சுகாதாரத் துறை அமைச்சர், மருத்துவமனை தலைவர் ஆகியோர் ராஜினாமா செய்துள்ளனர். இது குறித்து போராட்டம் நடத்தி வரும் இளைஞர்கள் கூறுகையில், "எங்கள் போராட்டத்திற்குக் கிடைத்துள்ள வெற்றி இது. மங்கோலிய மக்கள் கொரோனாவால் உயிரிழக்க மாட்டார்கள். மாறாக அரசின் இதுபோன்ற அலட்சியத்தாலேயே உயிரிழப்பார்கள்" என்றார். முன்னதாக கடந்த டிசம்பர் மாதம் கொரோனா நெகடிவ் சான்றிதழ் இல்லாததால் மருத்துவமனையில் அனுமதி மறுக்கப்பட்ட பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அந்நாட்டில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.