"மங்கி"யை வைத்து மார்ஸுக்குப் போக கனவு காணும் ரஷ்யா!
மாஸ்கோ: செவ்வாய் கிரகத்திற்குப் போகும் கனவில் உலகத்தின் அத்தனைப் பகுதி மனிதர்களும் ஆழ்ந்துள்ள நிலையில் செவ்வாய்க்கு குரங்குகளை அனுப்பி தரையிறக்கும் திட்டத்துடன் ரஷ்யா ஆய்வில் ஈடுபட்டுள்ளது.
ரஷ்ய அறிவியல் அகாடமி விஞ்ஞானிகள் தற்போது நான்கு குரங்களுக்கு பயிற்சி அளித்து ஆய்வில் ஈடுபட்டுள்ளனர். 2017ம் ஆண்டு இந்த குரங்குகள் செவ்வாய் கிரகத்திற்குச் செல்லவுள்ளன.
இதற்காக இந்த குரங்குகளுக்கு சிலவகை பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. ஜாய்ஸ்டிக்கை பயன்படுத்துவது, புதிர்களை விடுவிப்பது என்பவை இதில் சில. இந்த சோதனை வெற்றி பெற்றால் அடுத்த 2 ஆண்டுகளில் மனிதர்களை அனுப்ப திட்டமிட்டுள்ளதாம் ரஷ்யா.
தினசரி 3 மணி நேரம்
இந்த குரங்குகளுக்கு தினசரி 3 மணி நேரம் பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்த 3 மணி நேரமும் ஜாஸ்டிக்கை எப்படி கட்டுப்படுத்துவது என்பது குறித்துப் பயிற்சி அளிக்கப்படுகிறதாம். மேலும் சில கணிதப் புதிர்களை விடுவிப்பது குறித்த பயிற்சியும் தரப்படுகிறதாம்.
யாரும் இல்லாமல்
ஆரம்பத்தில் ஆட்கள் உடன் இருந்து பயிற்சி தருகிறார்களாம். கடைசிக் கட்டத்தில் யாரும் இல்லாமல் இந்த குரங்குகள் தனியாக பயிற்சி பெற வேண்டுமாம்.
ஜூஸ் தருவாங்களாம்
பயிற்சியின்போது சரியாக செய்யும் குரங்குகளுக்கு ஜில்லென்று ஜூஸ் தரப்படுமாம். அதை இந்த குரங்குகள் வாங்கி சப்புக் கொட்டிக் குடிக்கிறதாம்.
மாஸ்கோவில் பயிற்சி
மாஸ்கோவில் உள்ள பயோமெடிக்கல் கழகத்தில்தான் இந்தப் பயிற்சி நடைபெறுகிறது. பயிற்சியில் ஈடுபட்டுள்ள குரங்குகளுக்கு ஆயுள் காலம் 25 என்று கூறப்படுகிறது. இவை 6 மாத பயணத்திற்குப் பின்னர் செவ்வாய்க்குப் போய்ச் சேரும்.
குரங்குகளை வைத்து பிற குரங்குகளுக்கு
இந்தப் பயிற்சிக்குப் பின்னர் மேலும் சில குரங்குகளுக்கும் பயிற்சி தர திட்டமிடப்பட்டுள்ளது. இந்த குரங்குகளை வைத்தே அந்தக் குரங்குகளுக்குப் பயிற்சி தரவும் திட்டமிடப்பட்டுள்ளதாம்.
நிலவுக்கும் இப்படித்தான்
இப்படித்தான் முன்பு நிலவுப் பயணத்தின்போதும் கூட விலங்குகளை வைத்து சோதனைகள் நடத்தி அதிலிருந்து கற்று நிலவுப் பயணத்தை மனிதன் மேற்கொண்டான் என்பது குறிப்பிடத்தக்கது.