நேபாளத்தில் 24 மணிநேரத்தில் 30க்கும் மேற்பட்ட முறை நில அதிர்வு.. தொடர் பீதியில் மக்கள்!
காத்மாண்டு: நேபாளத்தில் நிலநடுக்கம் ஏற்பட்ட 24 மணிநேரத்தில் 30க்கும் மேற்பட்ட முறை ஆப்டர்ஷாக் நில அதிர்வு ஏற்பட்டுள்ளது.
நேபாளத்தில் நேற்று காலை 11.56 மணிக்கு கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் இந்த நிலநடுக்கம் 7.9 ஆக பதிவாகியிருந்தது. இந்த நிலநடுக்கத்தால் தலைநகர் காத்மாண்டு பெரும் சேதம் அடைந்துள்ளது. நிலநடுக்கத்தால் இதுவரை 1, 896 பேர் பலியாகியுள்ளனர்.
இந்நிலையில் இது குறித்து தலைமை விஞ்ஞானியும், புவி ஆராய்ச்சியாளருமான ஆர்.கே. சத்தா கூறுகையில்,
நேபாளத்தில் நிலநடுக்கம் ஏற்பட்ட 24 மணிநேரத்தில் 30க்கும் மேற்பட்ட முறை ஆப்டர்ஷாக் நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. இந்த நில அதிர்வுகள் மெதுவாக நின்றுவிடும். நில நடுக்கம் மிகவும் ஆழத்தில் ஏற்பட்டால் நில அதிர்வுகள் குறைந்த அளவில் ஏற்படும். ஆனால் நேபாளில் மேலோட்டமாக நில நடுக்கம் ஏற்பட்டுள்ளதால் அதிக அளவில் நில அதிர்வுகள் ஏற்படும் என்றார்.
அடுத்த 72 மணிநேரத்திற்கு நில அதிர்வுகள் இருக்கும் என்று கூறப்படுகிறது. கடைசியாக இன்று பிற்பகல் 12.39 மணிக்கு நேபாளில் நில அதிர்வு ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.7 ஆக பதிவாகி இருந்தது. இதையடுத்து பீகார், டெல்லி, பஞ்சாப், மத்திய பிரதேசம், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் நில அதிர்வு உணரப்பட்டுள்ளது.