2 மாதங்களில் 350 யானைகள் பலி.. காரணம் கொரோனாவா? மர்ம நோயா? பெரும் குழப்பத்தில் போட்ஸ்வானா!
காபரோனி: போட்ஸ்வானாவில் கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் 350க்கும் மேலான யானைகள் மர்ம நோய்க்கு பலியாகியுள்ள அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
தெற்கு ஆப்ரிக்க நாடுகளில் ஒன்றான போட்ஸ்வானா, வனவிலங்குகள் அதிகம் வாழும் நாடுகளில் ஒன்றாகும். இந்நாட்டின் ஓகவாங்கோ வனப் பகுதியில் ஆயிரக்கணக்கான யானைகள் வாழ்ந்து வருகின்றன.
அங்குள்ள ஓகவாங்கோ டெல்டா பகுதியில் கடந்த மே மாதத்தில் இருந்து 350க்கும் அதிகமான யானைகள் மர்ம நோய் தாக்கி உயிரிழந்துள்ளன. அப்பகுதியில் விமானம் மூலம் பறந்து கண்காணித்த போது யானைகளின் இறந்த உடல்களை வனத்துறை ஊழியர்கள் பார்த்து அரசுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
ஒரே மர்மம்.. காதில் வழியும் ரத்தம்.. காயங்கள்.. சுருண்டு கிடந்த யானை சடலம்.. பரபரப்பில் தேக்கம்பட்டி
350 யானைகள் பலி
"சுமார் 3 மணி நேரம் விமானத்தில் பறந்து பார்த்ததில் 169 யானைகளின் இறந்த உடல்கள் கண்டறியப்பட்டன. இத்தனை குறைவான நேரத்தில் இவ்வளவு அதிகமான யானைகளின் இறந்த உடல்களை பார்த்தது இதுவே முதல் முறை. பின்னர் நாங்கள் சென்று ஆய்வு நடத்திய போது 350க்கும் அதிகமான யானைகள் இறந்தது தெரியவந்தது", என்கிறார் பிரிட்டனில் இருந்து இயங்கும் நேஷனல் பார்க் ரெஸ்யூம் விலங்குகள் தொண்டு அமைப்பை சேர்ந்த டாக்டர் நியால் மெக்கேன்.
காரணம் வேட்டைக்காரர்களா?
மேலும், "வறட்சி இல்லாத சூழலில் இத்தனை யானைகள் உயிரிழந்திருப்பது மிக அதிர்ச்சியாக இருக்கிறது. வேட்டைக்காரர்கள் யானைகளை கொன்றிருக்கலாம் என அரசு முதலில் சொன்னது. ஆனால் வேட்டைக்காரரின் விஷம் கலந்த தண்ணீரை குடித்திருந்தால் மற்ற விலங்குகளும் இறந்திருக்கும். ஆனால் இங்கு யானைகள் மட்டுமே அதிகளவில் இறந்திருப்பதால், வேட்டைக்காரர்களால் இந்த சம்பவம் நிகழ்ந்திருக்காது என்றே தோன்றுகிறது", என்று நியால் மெக்கேன் கூறுகிறார்
மர்ம நோயா?
யானைகள் இறந்து கிடப்பதை பார்க்கும் போதும், ஒருவேளை ஏதேனும் மர்ம நோயினால் அதன் நரம்பு மண்டலம் தாக்கப்பட்டு அவை உயிரிழந்திருக்கக்கூடும் என்பதும் நியால் மெக்கேனின் கணிப்பு. கொரோனா தொற்று காரணமாக யானைகள் உயிரிழந்ததா என்பதும் அவரது சந்தேகம்.
தேடல்
ஆனால் யானைகள் ஏன் உயிரிழந்தன என்பது குறித்து யாராலும் உறுதியான முடிவுக்கு வர முடியவில்லை. இறந்த யானைகளின் உடல்களை ஆய்வு செய்யும் பணிகள் நடந்து வருகின்றன. அதன் முடிவுகள் வெளியான பிறகே யானைகளின் இறப்புக்கான காரணம் குறித்து தெரியவரும்.