ஏலியன்ஸ்களால் கடத்தப்படலாம்... அமெரிக்கர்களிடையே அதிகரிக்கும் அச்சம்!!
வேற்றுகிரகவாசிகளால் கடத்தப்படலாம் என அச்சம் காரணமாக அமெரிக்காவில் காப்பீடு செய்து கொள்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நியூயார்க் : ஏலியன்ஸ் குறித்த தகவலை விண்வெளி ஆராய்ச்சி அமைப்பான நாசா வெளியிட்ட நிலையில் ஏலியன்களால் கடத்தப்படுவோம்எ ன்ற அச்சத்தில் அமெரிக்கர்கள் அதிக அளவில் காப்பீடு செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி அமைப்பான நாசா வேற்று கிரகங்கள் பற்றி ஆய்வு செய்வதற்காக விண்வெளியில் கெப்ளர் விண்வெளி தொலைநோக்கியை நிறுவி, ஆராய்ச்சி செய்து வருகிறது.
இதன் முடிவுகள் கடந்த சில தினங்களுக்குள் வெளியிடப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதில் வேற்று கிரகவாசிகள் பற்றிய தகவல்கள் இடம் பெறும் என எதிர்பார்ப்பு நிலவியது.
நாசா விஞ்ஞானி
இந்த நிலையில் கலிபோர்னியாவில் நாசா விஞ்ஞானி மரியோ பெரஸ், நாசா மேற்கொண்ட கண்டுபிடிப்புகள் குறித்த தகவல்களை பகிர்ந்துகொண்டார்.
219 கிரகங்கள்
இதில் கெப்ளர் விண்வெளி தொலைநோக்கி மூலம் சூரிய மண்டலத்துக்கு வெளியே மேலும் 219 கிரகங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இந்த கிரகங்களுடன் சேர்த்து, இப்படி கண்டுபிடிக்கப்பட்டுள்ள மொத்த கிரகங்களின் எண்ணிக்கை 4 ஆயிரத்து 34 என்றும் அந்தத் தகவல்கள் தெரிவித்தன.
வேற்று கிரகவாசிகள்
இவ்வாறு புதிய கிரகங்கள் கண்டுபிடிக்கப்பட்டு வரும் நிலையில், வேற்று கிரகவாசிகளால் தாங்கள் ஒரு வேளை கடத்தப்பட்டுவிடக்கூடும் என கருதி அமெரிக்காவில் 40 ஆயிரம் பேர் காப்பீடு செய்து கொண்டிருக்கிறார்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
சினிமா பாதிப்பு
அமெரிக்காவை ஏலியன்ஸ்கள் தாக்குவது போலவும், வேற்று கிரகவாசிகள் அடிமைப்படுத்துவதை போலவும் ஹாலிவுட் படங்கள் வெளியாகி வருகின்றன. அதே பாதிப்பில் அமெரிக்கவாசிகள், வேற்றுகிரகவாசிகளால் கடத்தப்படலாம் என்ற கற்பனையில் கனவு கண்டு காப்பீடு செய்கிறார்களோ என்னவோ?
நம் ஊரில் எலிக்கு பயப்படுவது போல அமெரிக்காவில் ஏலியன்ஸ்க்கு பயப்படுறாங்க.