மாஸ்கோ: பள்ளிக்குள் நுழைந்து ஆசிரியர், போலீஸை சுட்டுக் கொன்ற மாணவன்! பிணைக் கைதியாக 20 மாணவர்கள்!!
மாஸ்கோ: ரஷியா தலைநகர் மாஸ்கோவில் பள்ளிக்கூடம் ஒன்றில் நுழைந்த மாணவர் ஆசிரியர் மற்றும் போலீஸை சுட்டுக் கொன்றுவிட்டு 20 மாணவர்களை பிணைக் கைதியாக்கினான்.
ரஷியாவில் 2004ஆம் ஆண்டு வடக்கு ஒஸ்ஸெடியா என்ற இடத்தில் பள்ளிக்கூடம் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதைத் தொடர்ந்து அனைத்து பள்ளிகளுக்கும் ஆயுதமேந்திய பாதுகாவலர்களை நியமிக்க அந்நாட்டு அரசு சட்டம் இயற்றியது.
இந்நிலையில் இன்று காலை தலைநகர் மாஸ்கோவின் வடகிழக்குப் பகுதியில் பள்ளிக் கூடம் ஒன்றில் துப்பாக்கியுடன் உயர்நிலைப் பள்ளி மாணவன் நுழைந்திருக்கிறான். அங்கு பாதுகாப்புக்கு நின்ற பாதுகாவலை துப்பாக்கி முனையில் மிரட்டிவிட்டு உள்ளே நுழைந்திருக்கிறான்.
இந்த தகவல் உடனேயே போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டது. அதற்குள் உயிரியல் பாட வகுப்புக்குள் நுழைந்த அந்த மாணவன் மொத்தம் 20 மாணவர்களை பிணைக் கைதிகளாக்கிக் கொண்டான். அப்போது அங்கு வந்த போலீசார் மற்றும் உயிரியல் பாட ஆசிரியரை நோக்கி கண்மூடித்தனமான சுட்டுள்ளான்.
இதில் ஒரு போலீஸ்காரரும் ஆசிரியரும் உயிரிழந்துவிட்டனர். மற்றொரு போலீஸ்காரர் படுகாயத்துடன் உயிர் தப்பினார். பின்னர் போலீசார் மேற்கொண்ட நடவடிக்கையில் பிணைக் கைதியாக இருந்த மாணவர்களை மீட்டனர். அவர்களில் பெரும்பாலானோர் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
பள்ளிக்கூடத்துக்குள் நுழைந்து மாணவன் ஒருவனே துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவம் அங்கு பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.