கணவர், கள்ளக்காதலன் மீதான கோபத்தில் குழந்தையின் தலையை துண்டித்தேன்: மாஸ்கோ ஆயா வாக்குமூலம்
மாஸ்கோ: கணவர் தனக்கு செய்த துரோகம் மற்றும் கள்ளக்காதலன் செய்த துரோகம் ஆகியவற்றால் ஏற்பட்ட கோபத்தால் 4 வயது சிறுமியின் கழுத்தை கத்தியால் அறுத்ததாக 38 வயது முஸ்லீம் பெண் தெரிவித்துள்ளார்.
உஸ்பெகிஸ்தானைச் சேர்ந்தவர் கியுல்செஹ்ரா போபோகுலோவா(39). அவர் ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் உள்ள ஒரு வீட்டில் குழந்தையை பார்த்துக் கொள்ளும் ஆயாவாக வேலை செய்து வந்தார். 3 குழந்தைகளின் தாயான அவரின் கணவர் உஸ்பெகிஸ்தானில் உள்ளார்.
இந்நிலையில் போபோகுலோவா தான் ஆயாவாக பணியாற்றிய வீட்டில் இருந்த 4 வயது சிறுமியை கழுத்தை நெறித்துக் கொன்றார். பின்னர் சமையல் அறையில் இருந்த கத்தியை எடுத்து வந்து சிறுமியின் தலையை துண்டாக அறுத்து அதை எடுத்துக் கொண்டு மாஸ்கோவில் உள்ள மெட்ரோ ரயில் நிலையத்திற்கு சென்று நான் ஒரு தீவிரவாதி என்று கத்தினார்.
இது குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் அவரை கைது செய்தனர். விசாரணையில் அவர் கூறியிருப்பதாவது,
நான் ரஷ்யாவில் இருக்கையில் என் கணவர் உஸ்பெகிஸ்தானில் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்தது பற்றி அறிந்து எனக்கு கோபம் வந்தது. மேலும் இங்கு தஜிகிஸ்தானை சேர்ந்த ஒருவருடன் எனக்கு பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. அவருக்கு ஏற்கனவே திருமணமானது எனக்கு தற்போது தான் தெரிய வந்து கோபம் ஏற்பட்டது.
இந்த கோபத்தால் தான் சிறுமியை கொலை செய்தேன் என்றார்.