ஜெர்மனி ஏர்போர்ட்டில் அதிகாரிகள் அட்டூழியம்.. சிங்கப்பூர் பெண்ணிடம் தாய்ப்பால் சுரப்பு சோதனை!
பெர்லின்: பாதுகாப்பு என்ற பெயரில் சிங்கப்பூர் பெண்ணின் மார்பகங்களில் பால் சுரக்கிறதா என்று சோதனை நடத்தப்பட்ட சம்பவம் ஜெர்மனியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிங்கப்பூரை சேர்ந்த இந்திய வம்சாவளி பெண் காயத்திரி போஸ். இவர் சமீபத்தில் ஜெர்மனியின், பிராங்பர்ட் நகருக்கு சென்றிருந்தார். அங்கிருந்து பாரீஸ் நகருக்கு செல்வதற்காக விமான நிலையம் சென்றவருக்கு காத்திருந்தது அதிர்ச்சி.
பாதுகாப்பு சோதனையின்போது, ஸ்கேன் மிஷினில், காயத்திரி போஸ் ஹேண்ட் பேக்கில் ஒரு வினோத கருவி இருப்பதை அதிகாரிகள் கவனித்தனர். எனவே ஹேண்ட் பேக்கை சோதனை போட்டு பார்த்தனர். அதில் தாய்ப்பாலை குழந்தைக்கு உந்தி தள்ளும் 'மார்பக பம்ப்' என்ற சிறு கருவி இருந்தது.
கருவியால் சந்தேகம்
ஆனால் இந்த கருவி மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் போகவில்லை. கைக் குழந்தை இல்லாத நிலையில், எதற்காக இந்த கருவியை உடன் கொண்டு செல்கிறீர்கள்? குழந்தை என்ன சிங்கப்பூரிலா இருக்கிறது என்று கேலியாக கேள்விகளை எழுப்பியுள்ளனர் விமான நிலைய அதிகாரிகள்.
இரு குழந்தைகள்
33 வயதாகும், காயத்திரி போசுக்கு 3 வயதில் ஒரு குழந்தையும், 7 மாதங்களில் மற்றொரு குழந்தையும் உள்ளன. அக்குழந்தைகளை சிங்கப்பூரில் விட்டுவிட்டுதான், காயத்திரி போஸ் ஜெர்மனி வந்திருந்தார். 7 மாத குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்க வசதியாகவே அந்த உந்து கருவியை அவர் எப்போதும் ஹேண்ட் பேக்கில் வைத்திருப்பது வழக்கமாம்.
பால் சுரப்பு சோதனை
இந்த விளக்கங்களை ஏற்க மறுத்தனர் அதிகாரிகள். பெண் அதிகாரிகளிடம் காயத்திரி ஒப்படைக்கப்பட்டார். அவர்கள் மறைவிடத்துக்கு அழைத்துச் சென்று காயத்திரியின் மேலாடைகளை களைய உத்தரவிட்டனர். மார்பகங்களை சோதனை செய்ய வேண்டும் என்று கடுகடுப்புடன் அவர்கள் உத்தரவை பிறப்பித்ததால் அதை காயத்திரியால் மீற முடியவில்லை. இதன்பிறகும் சோதனை நிற்கவில்லை. குழந்தைக்கு தாய்ப் பால் ஊட்டும்போது எப்படி செய்வீர்களோ அதை செய்துகாட்டுங்கள். பால் சுரந்து வருகிறதா என்பதை பார்க்க வேண்டும். அப்போதுதான் நம்ப முடியும் என்று மறு கட்டளை வந்தது.
முக்கால் மணி நேர வேதனை
இதற்கு காயத்திரி மறுத்தபோதிலும் பாஸ்போர்ட்டை அதிகாரிகள் பிடுங்கி வைத்திருந்ததால் அவரால் மேற்கொண்டு எதுவும் செய்ய முடியவில்லை. அரை நிர்வாணமாக அதிகாரிகள் முன்னிலையில் வைக்கப்பட்டதோடு, மார்பகங்களை அழுத்தி காண்பித்து குழந்தைக்கு இப்படித்தான் பால் புகட்டுவேன் என்று செய்முறை விளக்கம் கொடுக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டார் காயத்திரி போஸ். முக்கால் மணிநேர இந்த வேதனை-சோதனைக்கு பிறகு வெளியே வர அனுமதிக்கப்பட்டார் காயத்திரி.
|
வழக்கு தொடர திட்டம்
இதுகுறித்து பிரிட்டீஷ் செய்தி தளத்திற்கு அளித்துள்ள பேட்டியில், 45 நிமிடங்கள் கழித்து வெளியே வந்த பிறகுதான் என்ன நடந்தது என்றே எனக்கு படிப்படியாக புரியத்தொடங்கியது. நான் அதிகாரிகள் முன்னிலையில் மார்பகங்களை காட்ட பணிக்கப்பட்டேன் என்று உணர்ந்ததும் எனக்கு அழுகையே வந்துவிட்டது. இது பெருத்த அவமானம். இந்த அதிகாரிகள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க உள்ளேன் என்றார் அவர்.