அன்னை தெரசா செப்.4-ல் புனிதராக அறிவிக்கப்படுவார்: போப் ஆண்டவர் அறிவிப்பு
வாடிகன்: அன்னை தெரசாவை வரும் செப்டம்பர் 4-ந் தேதி புனிதராக அறிவிக்க போப் இரண்டாம் பிரான்சிஸ் ஒப்புதல் தெரிவித்துள்ளார்.
அல்பேனியா நாட்டில் 1910-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 27-ந் தேதி ஏழை குடும்பத்தில் பிறந்தவர் அன்னை தெரசா. அவரது இயற்பெயர் ஆக்னஸ் கோன்ஸா போஜாஸ்யூ.
இளம் வயதிலேயே சமூக சேவையில் ஈடுபட்ட அவர் 1929-ம் ஆண்டு இந்தியாவுக்கு வந்தார். லோரட்டோ மடத்தின் கொல்கல்கத்தா கிளையில் இருந்து கொண்டு பள்ளி ஆசிரியையாகப் பணியாற்றினார். ஆதரவற்ற முதியோர்களுக்கு அடைக்கலம் தந்தவர்; தொழு நோயாளிகளுக்காக ப்ரேம் நிவாஸ் இல்லத்தை தொடங்கினார்.
அன்னை தெரசாவுக்கு 1980-ல் பாரத ரத்னா விருது வழங்கிக் கவுரவித்தது மத்திய அரசு. முன்னதாக 1979-ல் அன்னை தெரசாவுக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. ஏழைகளுக்கான சேவையின் அடையாளமாக திகழ்ந்த அன்னை தெரசா 1997-ஆம் ஆண்டு செப்டம்பர் 5-ந் தேதி காலமானார்.
புனிதர் பட்டம்
ரோமன் கத்தோலிக்கர்களில் ஒருவர் இறந்தால் அவருக்கு புனிதர் பட்டம் வழங்கும் அதிகாரம் வாடிகன் கத்தோலிக்க திருச்சபைக்கு உள்ளது. அதற்கு முன்னர் அவர் அருளாளர் என அங்கீகரிக்கப்பட வேண்டும். புனிதர் பட்டம் பெறுவதற்கு கத்தோலிக்க கிறித்துவர்களின் நம்பிக்கையின்படியான 2 அற்புதங்களை நிகழ்த்தி இருக்க வேண்டும்.
முதல் அற்புதம்
மேற்குவங்கத்தை சேர்ந்த மோனிசா என்ற பெண் வயிற்றில் புற்றுநோய் கட்டியால் அவதிப்பட்டு வந்தார். அவர் தெரசா உருவம் பதித்த சங்கிலியை அணிந்து பிரார்த்தனை செய்ததால் புற்றுநோய் குணமானதாகவும் கூறப்படுகிறது. அதாவது அன்னை தெரசாவின் தூய ஆவிதான் அவரை குணப்படுத்தியதாக வாடிகன் சபையிடம் தெரிவிக்கப்பட்டது. இதை ஆய்வு செய்த பின் கடந்த 2003-ம் ஆண்டு அன்னை தெரசாவுக்கு அருளாளர் பட்டம் வழங்கப்பட்டது. இது புனிதர் பட்டத்துக்கு முந்தைய நிலையாகும்.
2-வது அற்புதம்
இதனைத் தொடர்ந்து பிரேசில் நாட்டைச் சேர்ந்த ஒருவர் மூளை பாதிக்கப்பட்டு கோமா நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். அவரும் அவரது குடும்பத்தினரும் அன்னை தெரசாவை பிரார்த்தனை செய்ய அவர் முழு நலமடைந்தார். இதற்கும் அன்னை தெரசாவின் தூய ஆவிதான் காரணம் என வாடிகனுக்கு தெரிவிக்கப்பட்டது.
புனிதர் பட்டம்
இந்த 2 அற்புதங்களை நிகழ்த்தியதால் அன்னை தெரசாவுக்கு போப் பிரான்சிஸ் புனிதர் பட்டம் வழங்க ஒப்புதல் அளித்திருந்தார். வரும் செப்டம்பர் 4-ந் தேதி அன்னை தெரசாவை புனிதராக போப் பிரான்சிஸ் அறிவிப்பார் என இன்று வாடிகன் அறிவித்துள்ளது. செப்டம்பர் 5-ந் தேதி அன்னை தெரசாவின் நினைவு நாளாகும்.