அன்னை தெரசாவின் 2வது அற்புதத்திற்கு போப்பாண்டவர் அங்கீகாரம்.. விரைவில் புனிதர் பட்டம்
வாடிகன்: அன்னை தெரசாவின் 2வது அற்புதம் குறித்து வாடிகன் சிட்டிக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து அதைப் பரிசீலித்து அங்கீகாரம் அளித்துள்ளார் போப்பாண்டவர் முதலாம் பிரான்சிஸ். இதையடுத்து தெரசாவுக்கு விரைவில் புனிதர் பட்டம் கிடைக்கும் என்று தெரிகிறது.
முன்னதாக மேற்கு வங்க பெண் மோனிகாவை குணப்படுத்தி அற்புதம் செய்த அன்னை தெரசா சமீபத்தில் பிரேசில் நாட்டைச் சேர்ந்த ஒருவரது மூளையில் உருவாகிய கட்டியை கரைத்து குணப்படுத்தி மீண்டும் அற்புதம் செய்தார். முதல் அற்புதத்தைத் தொடர்ந்து அன்னை தெரசாவுக்கு அருளாளர் பட்டம் வழங்கப்பட்டது. 2வது அற்புதங்களை நிகழ்த்தினால் புனிதர் பட்டம் கிடைக்கும் என்பதால் தெரசாவுக்கு விரைவில் புனிதர் பட்டம் கிடைக்கும் என்பது உறுதியாகியுள்ளது.
அல்பேனியா நாட்டில் பிறந்து கொல்கத்தாவில் குடியேறி ஏழை - எளியவர்களுக்கு தன்னலமற்ற சேவை செய்ததன், மூலம் இந்தியர்களின் மனதில் நீங்காத இடம் பிடித்தவர் அன்னை தெரசா. ஸ்கோப்ஜி என்ற சிறு கிராமத்தில் ஓர் எளிய குடும்பத்தில் பிறந்தவர் தெரசா. பிறந்தது 1910ம் ஆண்டு ஆகஸ்ட் 27ம் நாள். இளம்வயதிலேயே தந்தையை இழந்தவர்.
தாயால் வளர்க்கப்பட்ட தெரசா, 1929ம் ஆண்டு இந்தியாவிற்கு வந்தார். லோரட்டோ மடத்தின் கொல்கல்கத்தா கிளையில் இருந்து கொண்டு பள்ளியில் ஆசிரியையாகப் பணியாற்றினார். ஆதரவற்ற முதியோர்களுக்கு அடைக்கலம் தந்திருக்கிறார். தொழுநோயாளிகளுக்கு என்று `ப்ரேம் நிவாஸ்' இல்லம் தொடங்கினார்.
சேவைக்கு பாராட்டு
1962ல் பத்மஸ்ரீ விருது, 1962ல் பிலிப்பைன்ஸ் நாட்டின் மிக உயர்ந்த விருதான `ராமன் மக்ஸேஸே' விருது, 1971ம் ஆண்டு போப் ஆண்டவரின் உலக சமாதானப் பரிசு, அமெரிக்காவின் `நல்ல சாமரித்தான்' விருது, 1972ல் சர்வதேச நேரு சமாதானப் பரிசு, 1976-ல் சாந்தி நிகேதனில் டாக்டர் பட்டம் இவை அன்னை பெற்ற விருதுகளில் குறிப்பிடத்தக்கவை.
பாரத ரத்னா விருது
மத்திய அரசு அன்னை தெரசாவிற்கு 1980ல் `பாரத ரத்னா' விருது வழங்கிக் கவுரவித்தது. அன்னை தெரசாவின் பணியைப் போற்றும் விதமாய் உலக அமைதிக்கான நோபல் பரிசு 1979ம் ஆண்டு வழங்கப்பட்டது. ஏழ்மையான மக்களின் நலனுக்காகவே செலவிட்ட அன்னை 1997ம் ஆண்டு செப்டம்பர் 5ல் மரணமடைந்தார்.
அன்னை நிகழ்த்திய அற்புதம்
அவர் மறைவுக்கு பிறகு 2002ம் ஆண்டு மேற்கு வங்கத்தை சேர்ந்த மோனிசா என்ற பெண்ணின் வயிற்றில் இருந்த கட்டியை அன்னைதெரசா குணப்படுத்தியதாக தகவல் வெளியானது.பல்வேறு ஆய்வுகளுக்கு அன்னை தெரசா தூய ஆவியாக வந்து இந்த அற்புதத்தை நிகழ்த்தியதாக வாடிகன் கத்தோலிக்க சபை ஏற்றுக் கொண்டது.
அருளாளர் பட்டம்
இதையடுத்து 2003ம் ஆண்டு அன்னைதெரசாவை நினைவு கூறும் விழாவில், சுமார் 3 லட்சம் பேர் கலந்து கொண்டனர். இதை கண்ட அப்போதைய போப் ஆண்டவர் இரண்டாம் ஜான்பால், அன்னை தெரசாவுக்கு அருளாளர் பட்டம் வழங்கி கவுரவித்தார். கத்தோலிக்க கிறிஸ்தவ சபையில் ஒருவர் அருளாளர் பட்டம் பெற்றால்தான் புனிதர் பட்டத்துக்கு தகுதி பெற முடியும். அதோடு அவர் மறைவுக்கு பிறகு 2 அற்புதங்களையாவது நிகழ்த்தி இருக்க வேண்டும் என்ற மரபு உள்ளது.
புனிதர் பட்டத்திற்கு தகுதி
ஏற்கனவே மேற்கு வங்க பெண் மோனிகாவை குணப்படுத்தி அற்புதம் செய்துள்ள அன்னை தெரசா சமீபத்தில் பிரேசில் நாட்டைச் சேர்ந்த ஒருவரது மூளையில் உருவாகிய கட்டியை கரைத்து குணப்படுத்தி மீண்டும் அற்புதம் செய்தார். இந்த அற்புத நிகழ்வால் அன்னை தெரசா புனிதர் பட்டம் பெற தகுதி பெற்றுள்ளார்.
|
போப் பிரான்சிஸ் ஒப்புதல்
கத்தோலிக்க சபையின் நிபுணர்கள் குழுவும் அன்னை தெரசாவின் அற்புதத்தை ஆய்வு செய்து பரிந்துரை செய்துள்ளது. இதனை ஏற்றுக்கொண்ட போப் பிரான்சிஸ் அடுத்த ஆண்டு அன்னை தெரசாவுக்கு போப் ஆண்டவர் புனிதர் பட்டத்தை அறிவிப்பார் என்று தெரிகிறது. இந்த தகவலை இத்தாலிய கத்தோலிக்க செய்தித்தாள் ஒன்று வெளியிட்டு உள்ளது.