பாலி எரிமலை சீற்றம்: 1,00000 மக்களை வெளியேற்றும் பணி தீவிரம்
இந்தோனீசியாவின் பாலி தீவில் ஏற்பட்ட எரிமலை சீற்றம் தீவிரமடைந்ததையடுத்து அப்பகுதி சுற்றிலும் உள்ள மக்களை வெளியேற்றும்ணிவிரிவுபடுத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து இத்தீவுக்கு உயர்மட்ட எச்சரிக்கையை அந்நாட்டு அதிகாரிகள் விடுத்துள்ளனர்.
எரிமலை சீற்றம் அதிகரித்துள்ளதால், பாலியின் விமான நிலையம் மூடப்பட்டது. இதனால் சுற்றுலா வாசிகள் பலர் பயணம் செய்ய முடியாமல் அங்கேயே சிக்கியுள்ளனர்.
மலை உச்சியின் மேலிருந்து 3,400 மீட்டர் (11,150 அடி) வரை கரும்புகை சூழ்ந்துள்ளது.
மலையினில் இருந்து கீழே விழும் பாறைகள் மற்றும் குப்பைகளில் இருந்து மக்கள் விலகி இருக்குமாறு அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். .
பெரிய வெடிப்பு நிகழும் நேரம் நெருங்கிவட்டதா?
"பேரழிவுக்கான சாத்தியமும், உடனடி ஆபத்தும் இருப்பதினால்", ஞாயிறன்று உள்ளூர் நேரப்படி 6:00 மணிக்கு (22:00 ஜிஎம்டி) நான்காம் நிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
எரிமலையில் இருந்து தொடர்ந்து சாம்பல் துகள்கள் வெளிப்படுவதை காண முடிகிறது. வெடிப்பின் சத்தம், மலை உச்சியிலிருந்து 12 கிலோ மீட்டர் (7 மைல்கள்) வரை கேட்கப்படுகிறது
"இரவில் தீக்கதிர்கள் அதிகளவில் காணப்பட்டன. இது ஒரு பெரிய வெடிப்புக்கான சாத்தியக்கூறை காட்டுகிறது" என இன்டோனேஷியாவின் பேஸ்புக் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அகுங் எரிமலை சீற்றம், தீக்குழம்பு வெளியேற்றத்தையொட்டி அடுத்தக் கட்டத்தை அடைந்துள்ளதாக அடிலைட் பல்கலைக்கழகத்தின் புவியியல் நிபுணர் மார்க் டிங்கேய் பிபிசியிடம் தெரிவித்தார்.
"எரிமலை வெடிப்புகளை கணிப்பது கடினமான ஒன்று என்பதால், எந்த மாதிரியான சூழ்நிலை வரும் என்பதை கூற முடியாது" என்றார்.
"இந்த வெடிப்புகள் மிகப் பெரியதாகவும் பயங்கரமானதாகவும் இருக்கலாம். காலப்போக்கில் ஒப்பீட்டுப் பார்க்கையில் இது சிறிய வெடிப்பாகவும் இருக்கலாம்" எனவும் அவர் தெரிவித்தார்.
இந்தொனீசிய அதிகாரிகள் பல மாதங்களாக தங்களை தயார் படுத்தி கொண்டிருந்ததாகவும், அவர்கள் "சூழ்நிலையை கட்டுக்குள்" வைத்துள்ளதாகவும் மார்க் தெரிவித்தார்.
சுற்றுலாவாசிகளின் நிலை?
பாலி ஒரு முக்கிய சுற்றுலாதளமாகும். அதன் மற்ற முக்கிய இடங்களான குட்டா மற்றும் செமின்யாக் ஆகிய இடங்கள் எரிமலையிலிருந்து 70 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளன. இவை விலக்கு மண்டலத்தில் இருந்து நல்ல தொலைவில் உள்ளன.
அதிகளவிலான சாம்பல் துகள்கள் காரணமாக செவ்வாய் கிழமை காலை வரை பாலியின் நுகுரா விமான நிலையம் மூடப்பட்டிருக்கும். ரத்து செய்யப்பட்ட 445 விமானங்களால் 59 ஆயிரம் பயணிகள் பாதிக்கப்படுவார்கள் என விமானநிலைய அதிகாரிகள் தெரிவத்துள்ளனர்.
ரத்து செய்யப்படும் விமானங்களுக்கு தயாராக இருக்க வேண்டும் என்றும் உள்ளூர் ஊடகத்தை கண்காணிக்குமாறும் மற்றும் அங்குள்ள அதிகாரிகளின் எச்சரிக்கைகளை கேட்டு நடந்து கொள்ளுமாறும் ஆஸ்திரேலிய அரசு மற்றும் இங்கிலாந்தின் வெளியுறவுத்துறை அலுவலகம் அறிவுறுத்தியுள்ளது.
பாலிக்கு பயணிப்போர் எச்சரிக்கையாக இருக்குமாறு சீனாவும் அறிவுறுத்தியுள்ளது.
அருகில் உள்ள லாம்போக் தீவின் விமான நிலையம் திங்கட்கிழமை காலையன்று மீண்டும் திறக்கப்பட்டது.
உள்ளூர் மக்கள் எவ்வாறு சமாளிக்கிறார்கள்?
சாம்பல் விழுந்துள்ள பகுதிகளில், அதிகாரிகள் முகமுடிகளை விநியோகம் செய்து வருகின்றனர். மேலும், மலையை சுற்றியுள்ள விலக்கு மண்டலத்தின் 10 கிலோ மீட்டர் (ஆறு மைல்கள்) பரப்பளவில் உள்ள மக்கள் வெளியேற வேண்டும் என்று அவர்கள் உத்தரவிட்டுள்ளனர்.
100.000 உள்ளூர் மக்கள் வெளியேற வேண்டும் ஆனால் 40 ஆயிரம் பேர் மட்டுமே இதுவரை வெளியேறி உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
வெளியேற்றப்பட்டவர்களுக்கு உதவி செய்யும் கோபர்னிக் என்ற அரசு சாரா அமைப்பை சேர்ந்த ஆனா பராநொவா, மக்களுக்கு சிறந்த முகமுடிகள் மற்றும் பாதுகாப்பு கண்ணாடிகளை வழங்கி வருவதாக கூறினார்.
"மின்சாரம் நிறுத்தப்படும் பட்சத்தில், செய்திகளை அறிந்து கொள்ள சோலார் சக்தி மூலம் இயங்கக்கூடும் தொலைக்காட்சி பெட்டிகளை வழங்கவும் முயற்சித்து வருவதாக" அவர் பிபிசியிடம் தெரிவித்தார்.
தண்ணீரோடு கலந்துள்ள குளிர்ந்த தீக் குழம்புகளை எரிமலைக்கு அருகில் உள்ள வயல்கள் மற்றும் ஆறுகளில் காண முடிகிறது.
கனமழை காரணமாக இந்த குளிர்ந்த தீக்குழம்புகள் அதிகரிக்கக்கூடும் மற்றும் ஆகுங் மலையில் இருந்து பாறைகளும் தொடர்ந்து வெளியேற்றப்படும் என தேசிய பேரிடர் மேலான்மை ஆணையத்தின் பிரதிநிதி சுடோபோ பூர்வோ நூக்ரோஹோ எச்சரித்துள்ளார்.
அதிலிருந்து விலகி இருக்கவும், ஆறுகளின் அருகில் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ள வேண்டாம் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
கடந்த செப்டம்பர் மாதமே எரிமலை வெடிப்பு குறித்து எச்சரிக்கை விடுத்த அதிகாரிகள், மக்களை கூட்டமாக வெளியேற்றினர். எச்சரிக்கை நிலை குறைந்ததையடுத்து அக்டோபரில் மக்கள் வீடு திரும்பினர்.
இத்தகைய பெரிய வெளியேற்றங்களின் போது, சுற்றுலா மூலம் தீவிற்கு கிடைக்கவேண்டிய பொருளாதாரத்தில் 110 மில்லியன் டாலர் வரை இழப்பு ஏற்பட்டுள்ளது என்று அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர்.
இந்தோனீஷியாவில் இது சகஜமா?
50 ஆண்டுகளுக்கும் மேலாக, கடந்த வாரம் முதன்முதலில் கரும்புகையை இந்த எரிமலை கக்கியது.
இந்தோனீஷியா, பசிபிக்கில் உள்ள டெக்டானிக் பிளேட் மோதும் நெருப்பின் வட்டம் என்று குறிப்பிடப்படும் இடத்தில் அமைந்துள்ளது. இதனாலேயே, அங்கு தொடர்ந்து எரிமலை சீற்றங்களும், நில அதிர்வுகளும் இருந்துகொண்டே இருக்கின்றன.
இந்தோனேஷிய தீவில் தீவிர நிலையில் 130 எரிமலைகள் உள்ளன.
1963ஆம் ஆண்டு, கடைசியாக அகுங் மலை சீற்றமடைந்த போது, ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.
பிற செய்திகள் :
- சௌதி அரேபியா-இஸ்ரேல் : ரகசிய கூட்டணியின் மர்மம் என்ன?
- நாக்பூர் டெஸ்ட்: .300 விக்கெட்டுகள் எடுத்த அஸ்வின் - இந்தியா அபார வெற்றி
- ஜெயலலிதாவின் மகள் என உரிமை கோரிய பெண்ணின் மனு தள்ளுபடி
- சிரியா: ரஷ்ய விமானப்படை தாக்குதலில் 53 பேர் பலி