மியான்மர் சுரங்கத்தில் நிலச்சரிவு ஏற்பட்டு மண் மூடியதில் 113 தொழிலாளர்கள் பலி!!
யாங்கோன்: மியான்மரில் பச்சை மரகதக்கல் எடுக்கும் சுரங்கத்தில் சிக்கி 113 தொழிலாளர்கள் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மியான்மரின் வடக்கில் பச்சை மரகதக்கல் எடுக்கும் சுரங்கம் இருக்கிறது. இங்கு வியாழக்கிழமை தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. இதில், மண் சரிந்து சுரங்கத்திற்குள் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்களை மூடியது.
இதுகுறித்து பேஸ்புக்கில் பதிவு செய்திருக்கும் தீயணைப்புப் படையினர், ''மியான்மரின் வடக்குப் பகுதியில் கச்சின் மாநிலத்தில் பாகந்த் என்ற இடத்தில் விலையுயர்ந்த பச்சை மரகதக் கல் எடுக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டு இருந்தனர். அப்போது, வேகமாக மணல் காற்று வீசியது. இதைத் தொடர்ந்து பலத்த மழையும் பெய்தது.
அப்போது சுரங்கத்தில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் பணியில் ஈடுபட்டு இருந்த தொழிலாளர்கள் மணலால் மூடி இறந்தனர். இதுவரை 50 பேரின் உடல்களைத்தான் மீட்டுள்ளோம். தொடர்ந்து மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகிறோம்'' என்று தெரிவித்து இருந்தனர்.
தொடர்ந்து மீட்புப் பணி நடந்து வரும் நிலையில், தற்போது மீட்கப்பட்ட தொழிலாளர்களின் எண்ணிக்கை 113 ஆக அதிகரித்துள்ளது. இந்தப் பகுதியில் இருக்கும் சுரங்கங்களில் அடிக்கடி இதுபோன்று நிலச்சரிவு ஏற்படும் என்ற தகவலையும் குறிப்பிட்டுள்ளனர்.