எங்கள் 'கூல் கேப்டன்' முல்லா உமர்: மார்தட்டும் தாலிபான்கள்
காபூல்: ஆயிரக்கணக்கானோரை கொன்று குவிக்கும் திறன் வாய்ந்த தாலிபான் தலைவர் முல்லா உமர் ஏதோ சில காரணங்களுக்காக கேமரா முன்பு வர வெட்கப்படுகிறார்.
தாலிபான் தலைவர் முல்லா உமர் என்றால் மக்களிடையே பீதி ஏற்படுகிறது. ஆயிரக்கணக்கானோரை கொன்று குவிக்கும் திறன் வாய்ந்தவர். அண்மையில் முல்லா உமரின் வாழ்க்கை வரலாற்று புத்தகம் வெளியானது. உமர் கடந்த 2001ம் ஆண்டில் இருந்து தலைமறைவாகவே உள்ளார்.
அவர் உயிருடன் இருக்கிறாரா இல்லையா என்று விவாதம் நடந்து வருகிறது. ஒசாமா இறந்த பிறகு அல் கொய்தாவுக்கு ஏற்பட்ட கதியை பார்த்த தாலிபான்களுக்கு முல்லா உமர் மிகவும் முக்கியமானவர்.
முல்லா உமர்
முல்லா உமரின் வாழ்க்கை வரலாற்றை தாலிபான்கள் வெளியிட்டுள்ளனர். முல்லா உமர் உயிருடன் தான் இருக்கிறார், அதிகாரத்தில் தான் உள்ளார் என்பதை உலகிற்கு தெரிவிக்க விரும்புகிறார்கள் தாலிபான்கள்.
கூல்
முல்லா உமர் மிகவும் நம்பிக்கை வாய்ந்தவர். அவர் எந்த சூழலிலும் கோபப்படவே மாட்டார். அவருக்கு சொந்தமாக வீடோ, வங்கி கணக்கோ இல்லை. அவர் நகைச்சுவையாக பேசுவார். அனைவரையும் சமமாக கருதுவார் என்று தாலிபான்கள் தெரிவித்துள்ளனர்.
எங்கே உமர்?
முல்லா உமர் எங்கே இருக்கிறார் என்பது தான் மில்லியன் டாலர் கேள்வி. அவர் குகையில் மறைந்திருக்கிறாரா அல்லது அப்போத்தாபாத்தில் ஐஎஸ்ஐ பாதுகாப்பில் உள்ளாரா என்று எதுவும் தெரியவில்லை. சர்வதசே உளவு நிறுவனங்களுக்கே உமர் பற்றி எதுவும் தெரியவில்லை.
உயிருடன் இருக்கிறார்
முல்லா உமர் உயிருடன் இருக்கிறார் என இந்திய உளவுத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆப்கானிஸ்தானில் ஏதாவது பாதுகாப்பான இடத்தில் அவரை வைத்திருக்க வேண்டும். பின் லேடன் கொல்லப்பட்ட பிறகு உமரை பாகிஸ்தானில் இருந்து அழைத்துச் சென்றுள்ளனர். தாலிபான்களின் தற்போதைய நிலையை பார்த்தால் உமரின் தலையீடு இருப்பதாக தெரியவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தாலிபான்கள்
தாங்கள் முல்லா உமரின் கட்டுப்பாட்டில் இருப்பதாக உலக மக்கள் நினைக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள் தாலிபான்கள். ஆப்கானிஸ்தான் அரசு அமைதிப் பேச்சுவார்த்தை நடத்த முன்வந்தும் அதை தாலிபான்கள் ஏற்க மறுத்துவிட்டனர். ஆப்கானிஸ்தான் அதிபர் அமெரிக்காவின் கைப்பாவை என தாலிபான்கள் நினைக்கிறார்கள்.