கருப்பையை அகற்றி ‘கையுறையை’ உள்ளே வைத்த இங்கிலாந்து டாக்டர்களின் அஜாக்கிரதை
லண்டன்: கருப்பையை அகற்றச் சென்ற பெண்ணின் வயிற்றில் கையுறையை தவறுதலாக வைத்து அறுவைச் சிகிச்சை செய்தனுப்பியுள்ளனர் இங்கிலாந்து மருத்துவமனை மருத்துவர்கள் சிலர்.
இங்கிலாந்தின் டெர்பிஷைர் அருகேயுள்ள விர்க்ஸ்வொர்த் பகுதியை சேர்ந்த 42 வயது ஷாரோன் பிர்க்ஸ் என்ற பெண்மணி கற்றல் குறைபாடுள்ள குழந்தைகளை பராமரிக்கும் தொண்டு நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். உடல் உபாதைகளால் பாதிக்கப் பட்டிருந்த ஷாரோன் மருத்துவர்களின் அறிவுரைப்படி தனது கர்ப்பப்பையை அகற்ற முடிவு செய்துள்ளார்.
அதன்படி, கடந்த மாதம், ராயல் டெர்பி மருத்துவமனையில் நடைபெற்ற 5 மணி நேர ஆபரேஷன் மூலம் அவரது கருப்பை அகற்றப்பட்டது. ஆபரேஷனுக்குப் பிறகு கடுமையான வயிற்றுவலியால் தொடர்ந்து அவதிப்பட்டு வந்துள்ளார் ஷாரோன். அவரைப் பரிசோதித்த மருத்துவர்களும் வயிற்றுவலிக்காக மருந்து மாத்திரைகளை வாரி வழங்கியுள்ளனர்.
ஆபரேஷன் செய்யப்பட்டுள்ளதால் ‘கேத்தட்டர்' உதவியுடன் சிறுநீர் கழிப்பதால் தான் இத்தகைய வயிற்று வலி என முதலில் நம்பிய ஷாரோன், கேத்தட்டர் நீக்கப்பட்ட பின்னர் ஆஸ்பத்திரி கழிப்பறையில் மலம் கழிக்க சென்றபோது அசௌகரியமாக உணர்ந்ததாக மருத்துவர்களிடம் தெரிவித்துள்ளார்.
உடனடியாக, ஷாரோனை பரிசோதித்த மருத்துவர்கள், அவரது வயிற்றுக்குள் ஆபரேஷன் போது தவறுதலாக கையுறை வைக்கப் பட்டதைக் கண்டறிந்தார்கள். பின்னர், அவசர கதியில், மீண்டும் ஒரு ஆபரேஷனை செய்து வயிற்றுக்குள் இருந்த கையுறையை டாக்டர்கள் வெளியே எடுத்தனர்.
இந்த தவறு எப்படி நடந்தது? என்பது குறித்து சம்பந்தப்பட்ட மருத்த்வர்களிடம் உரிய விசாரணை நடத்தப்படும் எனத் தெரிவித்துள்ள மருத்துவமனை நிர்வாகம் , நடந்த தவறுக்காக ஷாரோனிடம் வருத்தமும், மன்னிப்பும் கேட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.