தோல் நோய்களிலிருந்து குழந்தைகளைக் காக்கும் ‘தாய்ப்பால்’ சோப்... ஆன்லைனில் விற்கும் தாய்
பிஜீங்: குழந்தைகளுக்கு பயன் படுத்தும் வகையில் தாய்ப்பாலால் உருவான சோப்புகளை ஆன்லைனில் விற்பனை செய்து வருகிறார் சீனாவைச் சேர்ந்த இளம் தாய் ஒருவர்.
சரிவிகித சத்தும் சிறந்த நோய் எதிர்ப்புச் சக்திகளைக் கொண்டதுமான தாய்ப்பாலை விடச் சிறந்த உணவு வேறு எதுவும் இல்லை என்பது மருத்துவ உலகில் ஏற்றுக் கொள்ளப் பட்ட உண்மை. எனவே தான் பிறந்தது முதல் குழந்தைக்கு இரண்டு வயது ஆகும் வரை தாய்ப்பால் தரப்பட வேண்டும் என மருத்துவர்கள் வலியுறுத்துகின்றனர்.
ஆனால், சீனாவைச் சேர்ந்த இளம் தாய் ஒருவர் தனது தாய்ப்பால் மூலம் குழந்தைகளுக்கான சோப்பு ஒன்றைத் தயாரித்து அதனை ஆன்லைனில் விற்பனையும் செய்து வருகிறார்.
தாய்பால் குடிக்க மறுப்பு...
சீனாவை சேர்ந்த 30 வயது பெண் ஒருவருக்கு சமீபத்தில் குழந்தை பிறந்தது. ஆனால், அவருடைய சுட்டிப் பையன் தன் தாயிடம் பால் அருந்த மறுத்து விட்டானாம்.
தாய்ப்பால் சோப்....
மற்ற பெண்களை விட அதிகமாக சுரந்த தாய்ப்பாலை வீணாக்க நினைக்காத அத்தாய், புதுமையாக எதையாவது செய்ய நினைத்துள்ளார். அப்போது அவருடைய சிந்தனையில் உதித்தது தான் ‘தாய்ப்பால்' சோப் ஐடியா.
மீன், முயல் வடிவங்களில்...
உடனடியாக தாய்ப்பால் மூலம் முயல், மீன் போன்ற வடிவங்களில் சோப் தயாரித்த அவர், அதனை ஆன் லைன் மூலம் விற்பனை செய்ய முடிவெடித்தார்.
அதிக வரவேற்பு...
சுத்தமான தாய்ப்பாலில் செய்த சோப்பு, குழந்தைகளுக்கு நேப்பி போடுவதால் வரும் தோல் சம்பந்தமான நோய்களை குணப்படுத்தும் என அவர் செய்த விளம்பரத்தால் தற்போது அச்சோப்பிற்கு மவுசு கூடியுள்ளதாம்.